தமிழ்வானின் விடிவெள்ளி

1. வெண்தாடி வேந்தர் தொடுத்த அறப்போர்

ஏடா! தமிழா! ஏனடா பிறந்தாய்!
வாடா, போடா, எனினும் ஏற்கலாம்.
மூடா, எனினும் தவறிலை பொறுத்தல்;
ஆடா? மாடா? பிறவியில் இழிந்திட!

இழிந்த பிறப்பெனில் வாழ்வும் இழியும்,
உயர்ந்த பிறப்பெனில் வாழ்வும் உயருமால்,
அயர்ந்த தமிழரிடை ஆரியர் திரித்தவாறு
இழிந்த பிறவியோ, தமிழின மாந்தர்!

பிறப்பினில் பேதம் கற்பனை செய்தோன்.
இறப்பினில் பேதம் எதனைக் கண்டான்?
பிறப்பினில் நால்வகை வருணம் பிரித்தோர்
சிறப்பினில் தமிழதைத் தாழ்த்தினரன்றோ?

உறுப்பினில், அறிவினில் குறையிலை எனினும்,
பிறப்பினில் இழிவை ஏற்றிடல் ஏனோ?
நால்வகை வருணம் நான்முகன் படைப்பெனில்
நான்முகன் பிறப்பும் நால்வருணக் கலப்போ?

மேல்வருணம் கீழ்வருணம் வகுத்த ஆசிரியர்
எவ்வருணம் என்பார், பஞ்சமர் தம்மை?
பஞ்சமர் தோற்றம் வெஞ்சமர்தனி லன்றோ?
அஞ்சாதவரைத் தீண்டவும் அஞ்சினர் அன்றோ?

நாவலந் தீவினில் நால்வருணம் படைத்தோன்,
மேனாடு தன்னில் எவ்வருணம் படைத்தான்?
கருப்பர் மண்ணில் நால்வருண முன்டோ?
வருணக் குலமுறை வெள்ளையர்க் குளதோ?

கற்பனைக் காரணம் காட்டுவார் தாம்காணார்;
முற்பிறவி, தலைவிதி, கரும்மெனப் பேசியே
கடவுள் படைப்பினை ஏற்பார் அறிவினை
மடமை இருளினில் மயக்கியே சாய்த்தனர்.

தெளிவிலாத் தமிழர் தேரும் வழியறியார்
எளியவ ராகியே ‘சூத்திரர்’ ஆனார்;
எதிர்த்து நின்றவர் ‘பஞ்சமர்’ ஆனார்;
ஏறியே அமர்ந்தவர் ‘பூதேவர்’ ஆனார்.

இந்நிலை எதனால்? இழிவும் எதனால்?
என்னும் சிந்தனை எழுப்பிய பெரியார்,
நன்னிலை எய்திடும் வழிதனை நாடுவார்,
தன்மான உணர்வே மருந்தெனக கண்டார்.

உணர்த்துவேன் உண்மை நாட்டவர் உணர்ந்திட,
ஊட்டுவேன் தமிழர்க்குத் தன்மான உணர்வினைக்
காட்டுவேன் எவர்க்கும் பகுத்தறிவுப் பாதை,
நாட்டுவேன் மானிட உரிமை என்றார், நாளும்!

நம்மவர்க்கும் ‘மானம்’ இருந்ததும் இலையோ?
நம்மவர்க்கு அறிவும் அழிந்தே போனதோ?
தன்மான இனமானத் தேவையை உணரார்,
தம்மின்மென எதைத்தான் காத்திட வல்லார்?

வந்தேறி வாழ்ந்திட, வாழ்ந்தவர் வீழ்வதோ?
தந்திரம் வென்றிடத் தமிழறம் தோற்பதோ?
வேற்றினம் தழைத்திடத் தமிழினம் தாழ்வதோ?
மாற்றார் ஆண்டிட மடமையில் நிலைப்பதோ?

உழைப்போர் பசித்திட உலுத்தர் கொழுப்பதோ?
உழவினைப் போற்றுவோர் வறுமையில் உழல்வதோ?
புல்லுருவி ஆணைக்குப் புலவரும் அடிமையோ?
வெல்போர் வீர்ரினம் வேருடன் மாய்ந்ததோ?

சாதிகுல்ப் பிறப்பும் ஆரியச் சதியே!
சனாதன தரும்மும் சதிகார்ர் நெறியே!
வேதாகம சாத்திர இதிகாச புராணங்கள்,
வைதிகர் விரித்த வஞ்சக வலைகளே!

உழைக்கப் பிறந்தார்க்குக் கைகளும் நான்கோ?
உண்ணப்பிறந்தார்க்கு இரைப்பையும் இரண்டோ?
பிறப்பினில் மாந்தர் உறுப்பால் ஒப்பெனில்,
இயற்கையில் அமையா வேற்றுமை எதற்கோ?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென’
அறம் உரைத்த சொல்லும் பொய்த்ததோ?
‘குலம் ஒன்றே மாந்தர் எல்லா’ மெனும்
மூலர் மொழியும் வாய்மை இழந்ததோ?

அன்பும் அறிவும் ஆற்றலும் உழைப்பும்
அறமும் பண்பும் நட்பும் மதிப்போர்,
ஒழுக்கம் போற்றி விழுப்பங் காண்போர்
இழுக்குடைச் சாதி ஏற்றலும் முறையோ?

தமிழன் பிறப்பினில் எவர்க்குந் தாழான்,
தமிழன் எவரையும் தாழ்த்தான் என்பது
தமிழன் வாழ்வினில் பழங்கதை ஆனதோ?
தமிழன் வாழ்வும் பழங்கதை தானோ?

சாதிப் பிரிவினில் கனலை மூட்டுவோம்!
சமய வேற்றுமை மாய்ந்திடச் செய்வோம்!
தீண்டாமைக் கேட்டினைக் களைந்து எறிவோம்!
வேண்டாத ஆரிய மாயையை எரிப்போம்!

மனிதனை மனிதன் மதித்து நடந்திட
மாண்புறு அறிவினைப் போற்றி ஒழுகிடப்
பகுத்தறிவு நெறியதனைத் தெளிந்த பெரியார்
பரப்பினர் நாளும் தன்மான உணர்வினை!

செந்நாய் குரைப்பின் சிங்கமும் நடுங்குமோ?
சிறுநரி ஊளையும் சிறுத்தையின் குகையிலோ?
வெஞ்சமர் அஞ்சிடா மரபினில் வந்தோர்
வஞ்சகர் மொழியினில் மயங்கி வீழ்வதோ?

அறிவினில் வயதில் தொண்டில் முதியர்
வாய்மைப் போருக்கு என்றும் இளைஞர்
பொய்ம்மைப் புரட்டினைப் பிட்டு஑் காட்டியே
மெய்ம்மை இதுவென விளக்கினா ரன்றோ?

ஈரோடு ஈன்ற தமிழினத் தந்தை!
போராடும் இயல்பினில் பூரித்த வேங்கை!
அறிவன அறிந்த அஞ்சா நெஞ்சினார்!
விழி, எழு, நடவென முழங்கின ரன்றோ!

விழித்தனம் நாமே! எழுந்தனர் நம்மவர்!
எழுந்தது தமிழகம்! நிமிர்ந்தனர் தமிழர்!
தழைத்தது தன்மானம்! கிளைத்தது மொழிப்பற்று!
செழித்தது பகுத்தறிவு, தொடர்ந்தது அறிவுப்போர்!

தொடித்தண் டூன்றிய தொண்டுப் பழமாம்
வெண்தாடி வேந்தர் தொடுத்த அறப்போர்
தொடரட்டும் தொடரட்டும் தமிழ்த்திருநாட்டில்
படரட்டும், பரவட்டும் பகுத்தறிவுப் பேரொளி!

2. பகுத்தறிவு

மனிதனை அடிமைத்தனத்தினின்றும் விடுதலை செய்வது பகுத்தறிவு; அதுவே – அவனது சூழ்நிலையின் தாக்கத்தால் இடம்பெறும் அறிவின் அடிமைத்தனத்தை அகற்றுகிறது! அதுவே – அவனுக்கு ஆசிரியனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது! அதுவே – அவனது உயர்வுக்குக் காரணமாவதால், அவன் பகுத்தறிவைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

”மூடநம்பிக்கை, பல தலைமுறைகளாக வருவதால், நம்முடைய பிறவியோடு ஒட்டி இருப்பதாகும்; அதை, ‘ஓட்டிவிட்டோம்’ என்று நாம் தீர்மானிக்கும் போதும், அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கி இருக்கும்; அதற்குக் கேடு இல்லை என்ற நிலையில் திடீரென்று வெளிப்பட்டு நிற்கும்” என்று ‘கதே’ என்ற அறிஞன் கூறுவது முற்றும் உண்மையாகும்.

எனவே, மனிதன், தனது நிலைத்த தோழனான பகுத்தறிவை எப்பொழுதும் சிந்தையில் கொள்வதோடு, பகுத்தறிவுக்குத் தனி உரிமை தந்து – அதன் வழி, அவன் ஒழுக வேண்டும்.

”உரிமை இன்றேல் , மூளை ஒரு குகையாகிவிடும்; அங்கே கட்டுண்ட கருத்துகள், திறக்க முடியாத வாயிலில் மோதி மோதி மடிந்து போகும்” – இது இங்கர்சால் தரும் தெளிவாகும்!

‘காலம் சுழல்கிறது!’ அறிவு ஒளி பரவுகிறது! இடைக்கால இருள் நீங்கி, மறுபடியும் மக்கள் பகுத்தறிவுப் பாதையில் நடக்க முனைகிறார்கள்!

”வரும்காலம் பழைமை நம்பிக்கைகளுக்கல்ல – புதுமைப் பகுத்தறிவு வாழ்விற்கே” என்று உறுதியாக்க் கூறலாம்.

அறிவும் பகுத்தறிவும்

‘அறிவு எனப்படுவதே சிறப்பாகப்பகுத்தறிவைத்தான் குறிக்கும். பகுத்தறியும் பண்பே அறிவின் சிறப்பிக்கும் – அதன் நன்மைகட்கும் காரணமாகும். பகுத்தறியும் ஆற்றல் இல்லையானால், ‘அறிவினால் பயனில்லை’ என்றே கூறிவிடலாம்.

பொதுஅறிவும் பகுத்தறிவும் :

‘பகுத்தறிவு’ ஆங்கில மொழியில் ‘காமன் சென்ஸ்’ (Common Sense) என்று வழங்கப்படுகிறது. அந்த ஆங்கிலச் சொல்லுக்கு நேரான சொற்பொருள் கொண்டால், ‘பொது அறிவு’ என்றே காணப்படும்; ஆனால், பொது அறிவு என்பதை ஆங்கிலத்தில், ‘ஜெனரல் நாலெட்ஜ்’ (General knowledge) என்றே வழங்குவர்; எனவே, பொதுஅறிவும் – பகுத்தறிவும் வெவ்வேறு பொருளைத் தருவன என்பது தெளிவாகும்.

‘பொதுஅறிவு’ – உலகின்கண் வாழ்வோன் அறியத்தக்க பல பொருள்களையும் அறிந்துள்ள அறிவின் பரப்பைக் குறித்தால், ‘பகுத்தறிவு’ ஒரு பொருளின் வகையையும் தரத்தினையும் தனித் தன்மையினையும் அறிந்துகொள்ளும் அறிவுத் திறனைக் குறிக்கின்றது.

அறிவின் விரிவையும் – பெருக்கத்தையும் – அளவையும் ‘பொது அறிவு’ குறிப்பிட்டால், ஒன்றன் நன்மைத் தீமையைப் பாகுபடுத்தித் தேர்ந்து தெளியும் அறிவின் கூர்மையையும், ஆற்றலையும் பகுத்தறிவு குறிப்பிடுகின்றது.

பொது அறிவின் அளவு – உலகின் – பொருள்களின் அளவு!

பகுத்தறிவின் அளவு -அறிவை ஒருவன் பயன்படுத்துவடன் அளவே!

பொது அறிவு – பொறிகள் செயற்படுவதன் விளைவை – அதனால் தொகுக்கப்பட்ட பொருளறிவைக் (விஷயஞானம்) குறிப்பிட்டால், ‘பகுத்தறிவு’ – அறிவின் முயற்சியை – சிந்தனை செயற்படும் வகையையே குறிப்பிடுகின்றது.

‘பொது அறிவை’ப் பால் என்று சொன்னால், அதைப் பருகுபவன் சுவைத்தலையும் – உட்கொண்டு அதன் பயனை நுகர்தலையும். ‘பகுத்தறிவு’ என்று கூறலாம்.

ஒருவனைக் காணும்போதே அவன் நடை – நொடி – தோற்றம் உரையாடல்களினின்றும், ‘இவன் அறிவுடையான் என்றோ அறிவில்லான்’ என்றோ கூறுகிறோம்.

அப்படி ஒரு முடிவுக்கு வர, கூறுபவன் – கூறப்படுபவன் ஆகிய இருவருமே அம் முடிவுக்கு ஆளாக்க் காரணமாக இருப்பது ‘பகுத்தறிவே ஆகும்.

ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள ‘பகுத்தறிவு’ ஆற்றலைப் பொருத்ததே அவனது தோற்றம் – நடை நொடியும் – எண்ணங்களும் – முடிவுகளுமாகும்.

அத்தகு பகுத்தறிவைப் பெற்றிருப்பதனாலேயே மனிதன், மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும்விட உயர்ந்தவனாக – சிறந்த உயிர்த்தனைம் உடையவனாக இருக்கின்றான்.

அறிவியல் துறை முடிவுப்படியும் – தமிழ் மரபுப்படியும், உயிர்கள் யாவும் ஓரறிவு முதல் ஆற்றிவுகளும் உடையனவாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உயிர்களிடம் ஊறு, ஓசை, காட்சி, நாற்றம், சுவை அறியும் புலன்கள் படிப்படியே வளர்ந்து – ஆறாவது அறிவாகிய பகுத்தறிவையும் உடையவனாக மனிதன் ஆகின்றான்.

உலகம் முழுவதுமே மிகப் பழங்காலத்தில் பகுத்தறிவைப் பயன்படுத்தியதுபோல் இடைக்காலத்தில் பயன்படுத்தவில்லை.

இடைக்காலத்தின் தொடக்கத்தில் – சாக்ரடீஸ்- கொதம புத்தர் – திருவள்ளுவர் போன்றோர் பகுத்தறிவைப் பயன்படுத்திப் பல உண்மைகளைக் கண்டு உலகிற்கு உணர்த்தியுள்ளனர்; எனினும், அக்காலச் சூழ்நிலைக்கேற்ப, சமயவெறி என்னும் படுகுழியிலும், ‘முன்னோர் ஏற்பாடு’ என்று முழு இருட்டிலும் உழன்ற மக்கள் தெளிவதற்காகத் தாம் கண்ட உண்மைகளையும் ஓரளவு சமயக் கருத்துகளுடன் – மத நம்பிக்கைகளுடன் கலந்தே பரப்பிலாயினர்!

எனவே, அவர்கள் காட்டிய ஒளியை, இருள் பின்னரும் சூழலாயிற்று! இருட்காலம் முடிவு எய்தும்படி ஒளிபரவத் தொடங்கிற்று – விஞ்ஞானக் காலம் ஆதலால்.

விஞ்ஞானக் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும், மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றி – வாழ்க்கையில் இரண்டறக்கலந்தமையினாலேயே மக்கள் பலர் மறுபடியும் பகுத்தறியத் தொடங்குகின்றன்ர்; எனினும், பலர் இன்னும் அவ்வழி நடக்க முனையவில்லை!

தொல்லுலகில் தனி மனிதன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவே, ‘பகுத்தறிவு’ இன்றியமையாத்தாக இருந்தது; இடைக்காலத்தில் கூட்டு வாழ்க்கை நிலைபெற்று – தனி மனிதனின் தேவைகள் பலவும் எளிதில் நிறைவேறி – சமூக வாழ்க்கை ஓரளவு பாதுகாப்பினையும் நல்கியதால் பகுத்தறிவைப் பயன்படுத்தும் வாய்ப்பும், தேவையும் குறைந்து பகுத்தறிவுத் திறன் மங்கிற்று!

‘பொது அறிவு வளர்ச்சியும் -கற்பனைகளும் – நம்பிக்கைகளுமாகச் சேர்ந்து, ‘பகுத்தறிவு’வுக்கு இடமில்லாது தடை செய்துவிட்டது!

விஞ்ஞானம் சிறந்து – சமூக அமைப்பைக் குறித்த கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டு – சமத்துவத்தைக் கருதும் போராட்டங்கள் நிறைந்து, பழைமைக் கருத்துகளும் – மத நம்பிக்கைகளும் நிலைகுலையத் தொடங்கியவுடன்தான், ‘பகுத்தறிவு’ மறுமலர்ச்சி பெறலாயிற்று!

மனிதன் தன் மனத்தில் வளர்த்துக்கொண்ட, இருளினின்றும் ஒளி காண்கின்றான்!

மனிதன் பகுத்தறிவோடு வாழ்வானேயானால், அவன் இயற்கையை ஆள்வது மட்டுமன்றி, மூட நம்பிக்கையாகிய விதியையும் வெல்ல முடியும்! சூழ்நிலையின் விளைவாக எந்நிலையிலும் தற்செயலாக வடிவெடுக்கும் இயற்கையின் வடிவாகிய ஊழயே வெல்லக்கூடுமானால், வேறு எதைத்தான் அவன் நிறைவேற்ற முடியாது?

எனவேதான், விடாமுயற்சியை வலியுறுத்த வந்த வள்ளுவப் பெருந்தகை, ‘வருந்திச் சோர்வு கொள்ளாமல், தானம் எடுத்துக்கொண்ட கடமையில் மேன்மேலும் முயல்கின்றவர் -வலிமிக்க ஊழையும் புறங்காண்பர்’ என்று கூறினார்; அவர் தந்த அவ்வருங் குறள் இதுவாகும்;-

ஊழையும் உப்பங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர். (620)

சமூகத்தைத் திருத்த – நாட்டை நல்வழிப்படுத்த – உரிமை பெற – உலகிற்கே வழிகாட்ட மன்பதையின் நிலையை உயர்த்தப் பகுத்தறிவே அடிப்படையாகிறது.

எனவேதான், பகுத்தறிவுப் பண்பை நமது நாட்டில் வளர்க்க மறுமலர்ச்சி இயக்கங்கள் பாடுபடுகின்றன; நாட்டிலே உள்ள ‘பகுத்தறிவுக் கழகங்களும் அத்துறையில் உழைக்கின்றன.

என்றாலும், ‘பகுத்தறிவுப் பணி புரிவோருக்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒருநாளும் கிடைப்பதில்லை.’ என்று இப்சன் என்பார் கூறியதே இன்று இங்குள்ள நிலையாகும். அந்நிலையுங்கூட மாறும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, இந்நாளில்!

அறிவுச் செம்மை அளிப்பது :

உலகில் தோன்றும் உயிர்கள் அனைத்தும் அவை இயற்கையில் பெற்றுள்ள உணருந் திறனுக்கும் பொறி வளர்ச்சிக்கும் ஏற்ப உயருகின்றன. உறுதல் உணர்வு முதலாகக் காணல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் ஆகிய உணர்வுகளைப் பெற்றுள்ள அளவுக்கு அவற்றின் அறிதல்திறன் வளர்ந்துள்ளது. மற்ற உயிர்களைக் காட்டிலும் – மனிதன் பகுத்திறியும் திறன் பெற்றிருப்பதாலேயே மற்ற உயிர்களினும் மேம்பட்ட அறிவு உடையவனாகிறான்.

அறிந்தவற்றை நினைவில் கொண்டும் – அறிந்ததை பிறவற்றோடு ஒப்பிட்டு நோக்கியும் வேறுபடுத்தியும் – பகுத்துணரும் ஆற்றல் வளரும்போதே பகுத்தறிவு பிறக்கின்றது. மற்ற உயினங்களிலும் மூளை வளர்சிச்சியால் சிறந்துள்ள மனிதனே – பகுத்தறியும் ஆற்றல் பெறுகிறான். பகுத்துணரும் பயிற்சி வளர வளரக் காரண – காரிய விளக்கங்காணும் அறிவு முயற்சி சிறந்து பகுத்தறிவு ஒளிர்கின்றது.

பகுத்தறியும் திறன் பயன்படுத்தப்பதாதவிடத்துப் – பொறிகளால் மட்டுமே பெறும் அறிவு, உண்மையைத் தெளிந்ததாவதில்லை.

”கண்ணால் கண்டதும் பொய் – காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்னும் பழமொழி இதனையே விளக்கும்.

இளைஞன் ஒருவனுக்கும் இளநங்கை ஒருத்தியும் உலா வருவதைக் கண்டதாலேயே அவர்களைக் ‘காதலர்’ என்று கொண்டிடலாகாது. அவர்கள் உடன்பிறப்பாகவோ – ஒரு சாலை மாணவர்களாகவோ இருக்கலாம்.

நாதசுர இன்னிசை ஒலிப்பதைக் கேட்ட அளவில் அதை ஒருவர் அண்மையில் இசைப்பதாகக் கருதிவிடவியாலாது. அது வானொலி வாயிலாகவோ – இசைத்தட்டினாலோ எழும்புவதாக அமையலாம்.

‘மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்னும் பழமொழியும், பொறி அறிவால் மட்டும் உணருவதைப் பகுத்தறியாத நிலையில், ஒருவரிடம் ஏற்படும் தடுமாற்றத்தையே புலப்படுத்தும்.

மனத்தில் பதிந்திருந்த தவறான எண்ணமும் – தடுமாற்றத்தலா குழம்புகின்ற அறிவும் தெளிவற்ற ஒரு காட்சியைக் காணும்போது ஏற்படுத்தும் விளைவே இது.

இரவுக் காலத்தில் காது மந்தமான் ஓர் இளைஞனுக்குத் தையற்கலை பயிற்றுவித்த ஒருவன் – கழுத்தை வெட்டு, கையை வெட்டு” என்று கூறியதை, நேரில் காணமுடியாத நிலையில்- காதால் மட்டும் கேட்ட ஒருவன் கொலைமுயற்சி நடப்பதாக்க் கொண்ட தவறான எண்ணம், இதையே புலப்படுத்தும். எனவே, பொறியினால் பெறும் அறிவு எல்லா வகையிலும் உண்மையை உணர்த்துவதாகவும் நிறைவுடையதாகவும் அமையாத்தால் – பகுத்தறிவே அந்தக் குறையை நீக்கி நிறைவு செய்கிறது.

பிற உயிரினம் பெற்றிடாதது :

மற்ற உயிரினங்களில் சிலவற்றின் பொறி புலன் ஆற்றலும், இயல்பு உணர்வுத் தூண்டுதலும், சிலவகைச் செயலாற்றும் வாழ்க்கை அமைப்பும், மனிதனிம் பொறி புலன் ஆற்றலைவிட மேமேபட்டதாயும், தனிச்சிறப்புதையதாயும் காணப்படினும் – அவை பகுத்தறியும் திறன் பெற்றிருப்பதாக்க் கருதுவதற்கு இடமில்லை.

நாய் முதலான சில விலங்குகள் முகர்ந்து அறியும் (மோப்பம்) ஆற்றலிலும், பருந்து முதலான சில பறவைகள் நெடுந்தொலைவில் உள்ள சிறு பொருள்களையும் புழு பூச்சிகளையும் கண்டுகொள்ளும் ஆற்றலிலும், பூனை – ஆந்தை முதலானவை நிறை இருளிலும் தமது இரையைக் கொண்டுகொள்ளும் திறனிலும், தூக்கணாங்குருவி முதலான சில பறவைகள் வியப்பூட்டும் வண்ணம் கூடுகட்டுவதிலும், யானை முதலான சில விலங்குகள் இனந்தழுவிக் கூட்டமாக வாழுந் திறனிலும், புறா – முதலானவை இறுதிவரை இணைமாறாது வாழும் திறனிலும் சிறந்து விளங்குகின்றன் என்பது நாமறிந்ததே.

கூட்டு வாழ்க்கை அமைப்பு, பணிப்பங்கீடு, உழைக்குந் திறன் ஆகியவற்றால் வியப்பூட்டும் தேனீ, எறும்பு ஆகியவற்றின் அறிவு – பகுத்தறியும் ஆற்றலுடையதுபொல் தோன்றச் செய்வதும் உண்மேயே. சிலவகைக் கடலுயிர்களின் வாழ்க்கையும், உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குப் பறந்து சென்று திரும்பும் சில பறவைகளின் செயலும், பெரும் படைஎடுப்பு நடத்தும் வெட்டுக்கிளிகள் – சிலவகை எறும்புகள் ஆகியவற்றின் போக்கும் எண்ணுமிடத்து வியப்பாகின்றது.

மீன் முதலிவற்றின் நீந்தும் ஆற்றலும், பறவைகளின் பறக்கும் ஆற்றலும் மனிதனுக்கு இல்லாத ஆற்றலாக அமையினும் – அதனால் அவை மனிதனின் பகுத்தறிவுக்கு ஈடான ஆற்றலைப் பெற்றதாக என்பதைப் போலத்தான் நாம் வியக்கும் மற்றைய ஆற்றல்களும் அவற்றிடம் அமைந்துள்ளன்.

மற்ற உயிரினங்களிடம் காணப்படும் இவ்வகை ஆற்றல்கள், அவற்றின் பொறிகளின் திறன், இயற்கையாய் ஏற்பட்ட பயிற்சி, நாம் கணித்தறிய முடியாத காலத்திலிருந்து அவை வாழ்ந்த சூழ்நிலை, ஆகியவற்றால் உருவாகியனவே அன்றிப் பகுத்தறியும் திறனால் இந்த ஆற்றலைப் பெற்றவையாகா.

மனிதானல் போற்றி உரைக்கப்படும் நாயின் நன்றி உணர்வும், இனத்தைக் கரைத்து அழைத்து உண்ணும் காகத்தின் இயல்பும், தோழமைக்கொள்ளும் நாய், பூனை, குதிரை முதலானவற்றின் இயல்பும், பழக்கத்தலும், த்ததம் தேவை நிறைவுக்குத் துணையாவதில் அவை கொள்ளும் ஆர்வத்தாலும் உருவானவையே. அவ்வியல்புகளின் நன்மை அல்லது உயர்வு இது என்று தெளிந்த பகுத்தறிவால் உருவானவை ஆகா.

குழந்தை அறிவு :

தூக்கிவைத்துக் கொள்பவர் யாராயினும் அழுகையை நிறுத்தும் குழந்தை; அன்னையின் முகம்பார்த்த அளவில், உறவுநிலை அறியாவிடினும், பசியாறும்போது பார்த்துப் பழக்கப்பட்ட முகம் என்பதால். அந்த உணர்வு கொள்வதால் சிரிக்கும் குழந்தை; காரணம் தெரியாமலே பொம்மையைப் பார்த்து மகிழும் குழந்தை; கிலுகில்ப்பை ஆட்டுகறிவரிடம் தாய் மடியிலிருந்து தாவும் குழந்தை! – என்னும் வகையில் உள்ள குழந்தையின் அறிவு நிலையினை ஒத்ததுதான் அந்த விலங்குகளிடம் காண்படும் அறிவும்.

நோயுற்ற காலத்து நாய் முதலான சில விளங்குகள் உணவைமறுத்து உண்ணாமலே இருக்கின்றன. சில விலங்குகள் சில நோய் ஏற்பட்டவிடத்துச் சில மருந்துச் செடிகளின் தழைகளைத் தேடித்தின்று நோய் தணிப்பதாக மருத்துவ நூலோர் கண்டு கூறியுள்ளனர். கோழி – புறா முதலான பறவைகள் சில, உடலின் தேவையை நிறைவு செய்யச் சிலவகைச் சுண்ணாம்புக்கற்களைப் பொறுக்கி விழுங்குகின்றன. உடம்பின் உப்புத் தேவைக்காக ஒரு மாடு மற்றொரு மாட்டின் உடம்பினை நாவால் வருடிச் சுவைக்கிறது.

ஓரின விலங்கின் குட்டிக்குப்பால் கொடுத்து வளரச் செய்வதும் ஓரிரு இடங்களில் நிகழ்கிறது. இவை எந்த அளவு வியப்பைத்தரினும், அந்தந்த விலங்குகளின் இயற்கை உணர்வினாலும், எதிர்பாராது ஏற்பட்ட பயன் நினைவாலும் பழக்கத்தின் விளைவாலும் நிகழ்வனவேயன்றி – அவை பகுத்தறியும் திறன் பெற்றதால் அல்ல.

பகைக்கு எடுத்துக்காட்டாகும் நாயும் பூனையும் நட்பாகவும் பழகிவிடுவதைச் சில இடங்களில் காண்கிறோம். புலியும் ஆடும் – சிங்கமும், நாயும் போன்ற விலங்குகள் ஒன்றாகச் செயல்படுத்தப்படுவதையும் சர்க்கசில் காண்கிறோம். இவையும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை – ஒரு வகை அச்சம் இவைகட்கு ஆட்பட்டதன் பயனே அன்றி வேறல்ல.

அந்த விலங்குகளின் செயல் ஓரளவு பகுத்தறிவின் சாயல் உடையதுபோலத் தோன்றினும் – அச்செயலுக்கு ஒரு காரண காரியம் இருப்பது உண்மை என்றாலும் – அந்தக் காரண காரியம் எதுவென நாம்தான் எண்ணிப் பார்த்து அறிகிறோமே அன்றி, அந்த விலங்குகளுக்கு அவற்றை அறியும் ஆற்றல் இல்லை.

மனிதன் வளர்க்கும் நாயும், குரங்கும் பிறவும் அவன் தந்துள்ள பயிற்சிக்கேறப – ஆட்டுவித்தப்படி ஆடுவதாய் – இயங்குமேயன்றி, அவை தாமே தம் அறிவாற்றலைக் கொண்டு தீர்மானித்து அவ்வாறு இயங்க முற்படுவதில்லை.

மனித குல மேம்பாட்டிற்குத் துணை :

மனிதன் பழக்கினால் அதற்கேறப்ப் பழகுவதேயன்றி – எந்த விலங்கும் மனிதனைப் பழக்குவதில்லை. எனவே, அந்த உயிரினங்களின் பொறியாற்றலும், உடல் வலிமையும் எவ்வளவு தனிச்சிறப்பு உடையவையாயினும், மனிதனிடம் அமைந்துள்ள ‘பகுத்தறிவு’ ஆற்றலுக்கு அவை ஈடாவதில்லை. மனிதனிடம் மட்டுமே காணப்படும் அந்தப் பகுத்தறிவு ஆற்றலே அவனது உயர்வுக்கு, மனிதகுல மேமேபாட்டுக்குத் துணை செய்வதாகிறது.

பகுத்தறியும் தனித்திறன் மனிதனிடம் மட்டுமே உண்டு எனினும் – மற்ற உயிரினங்களைப் போன்றே மனிதனும் சூழ்நிலைக்குப்பெரிதும் ஆட்பட்டவனே. சூழ்நிலை இது எனத் தெரியும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. ஆயினும் சூழ்நிலைக்கே ஆட்பாடது, தன்னை எஞ்ஞான்றும் விடுவித்துக் கொண்டவனாக அவனால் எண்ணும் இயங்கவும் முடிவதில்லை.

பாசி படர்ந்துள்ள குளத்தில் நீரை முகக்கும் ஒருவன்- கைகளால் பாசியை விலக்கி விலக்கி நீரை அள்ளினாலும் பின்னரும் பாசி படர்ந்து கொள்வதைப் போன்று, ஒவ்வொரு நிலையிலும் – நினைப்பிலும் மனிதம் பகுத்தறிவைப் பயன்படுத்தி சூழ்நிலை உருவாக்கிய எண்ணத்தைக் கடந்தாலும், பின்னரும் சூழ்நிலை எண்ணம் சூழ்ந்துவிடுவது இயற்கையாகும். அதனை கடந்து செல்லும் முயற்சியில் மனிதன் தன் அறிவைத்தொடர்ந்து பயன்படுத்துவதே பகுத்தறிவின் பயனாகும்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலுங்கூட, முன்னேறிய மக்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தும் அளவு, பயன்படுத்த வழியற்ற மக்களும் உலகில் பலராவர். அவர்தம் சிந்தனை ஆற்றல், பயிற்சி இன்மையால் மிகவும் குறைந்துள்ளதால், பகுத்தறிவு இல்லாத மக்களாகவே எண்ணப்படுகின்றனர். ஆனால், அவர்களிடமும் – அவர்தம் வாழ்க்கை நிலைமைக்கேற்ப்ப் பகுத்திறயுந்திறன் அமைந்துள்ளதை நுணுகிக் காண்போர் தெளியலாம்.

பகுத்தறியும் நிலைபெறல் :

நாகரிக வாழ்வு நடத்துபவர்கள் எனக் கருதப்படும் நிலையினரிடையிலும் பகுத்தறிவுக்கொவ்வாதச் சில நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் காணலாம். இளமை முதல் அவரவரிடம் ஊறிய எண்ணமும்ர வளர்த்துக்கொண்ட சிந்தனைப் போக்கும் ஒவ்வொரு துறையில் பகுத்தறிய முற்படச் செய்யினும், வேறு சில துறைகளில் பகுத்தறியவே தலைப்படாத நிலைக்கு ஆளாக்கியுள்ளன. எனவே, அனைத்துத் துறைகளிலும் தோன்றும் கருத்துகள் ஒவ்வொன்றையும் எல்லா நிலையிலும் தாமே பகுத்தறியம் நிலையினர் என்று யாரையும் குறிப்பிடுவது கடினமேயாகும்.

சில துறைகளில் தேர்ந்த அறிவுடையார் பலர் – பல துறைகளில் ஏதும் அறியாதவராய் இருப்பதைப்போன்றே பகுத்தறிவைப் பயன்படுத்துவதிலும் இயல்பாகவே- ஒவ்வொருவரும் ஒவ்வொருதுறையில் ஒவ்வோரளவே பயன்படுத்துகின்றன்ர். வாழ்க்கை நிலை, சமுதாய அமைப்பு, சமய உணர்வு, பழக்கவழக்கம், அரசியல், பொருளியல் முதலான பல்வேறு துறைகளிலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவோர் மிகச் சிலரே. அவருள்ளும் அனைத்துத் துறைகளிலும் ஒரே கருத்தை ஏற்போர் இல்லை என்றே கூறலாம்.

கணிதம், அறிவியல் முதலான துறைகளில் ஆராய்வோர் ஒருமித்த முடிவுக்க்கு வரமுடிகிறது என்றாலும், ஒரு புதிய உண்மை காணப்பட்டடவிடத்து, அது பருக்கும் உடனைபாடாகும்வரை மாறுபட்ட கருத்துகள் எழ்த்தான் செய்கின்றன.உடன்பாடு காணப்பட்ட பின்னரும் – பிறிதொரு காலத்தில் புதிய உண்மை காணப்பட்டவிடத்து, முன்னர் ஏற்க்ப்பட்டதொரு உண்மை, உண்மையற்றதாகவோ பயன் குறைந்ததாகவோ ஆகின்றது. ‘அறிவுக்கு எல்லை இல்லை’ என்பதற்கேறப அறிவியல் ஆய்வுகள் பல, முடிவு செய்யப்படாமலேயே மேலும் மேலும் உண்மை நாடி ஆராயப்படும் நிலையிலேயே இன்றும் உள்ளன.

எனவே, பகுத்தறிவு இல்லாத – பகுத்தறிவையே பயன்படுத்தாத மனிதனும் இல்லை; அனைத்துத் துறைகளிலும் பகுத்தறிந்து தெளிந்த மனிதனுமில்லை என்பது உண்மையாகும்.

மனிதன் எந்தெந்த அளவு, எவ்வெத் துறையில் தன் எண்ணங்களை, ஏற்றுக்கொண்டுள்ள கருத்துகளை, உலகியலைப் பகுத்தறிய முற்படுகின்றானோ அந்தந்த அளவே அவ்வத் துறையில் அவன் பகுத்தறிவுடையவனாகின்றான். அவரவர் அறிவுநிலை -பகுத்தறியும் திறன்- பகுத்தறியும் வாய்ப்பு, சூழ்நிலை- சமுதாய ஏற்படமை, இப்படிப்பட்ட எத்தனையோ ஏதுக்ககளுக்கேற்ப ஒவ்வொருவரும் பகுத்தறிந்து காணும் முடிவும், வகையும் பயனும் வேறுபடுகின்றன. அயது, கல்வி, பொருள்நிலை, மொழி, நாடு இவற்றால் ஒத்த நிலையினரான இருவர்கூட அனைத்திலும் ஒரே வகையான கருத்தினைக் கொள்வதும் இல்லை. ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுங்கூட ஒரே முடிவு காணும் வண்ணம் – ஒரே நிலையில் பகுத்தறியும் திறன் பெறுவதில்லை.

இரண்டு மனிதர்கள் அனைத்து வகைகளிலும் ஒத்த உருவம் பெறாததைப் போன்றே, உள்ளங்கையல் காணும் கோடுகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதைப் போன்றே – அனைத்திலும் ஒரே எண்ணம் பெறுவதும் இயல்வதல்ல.

மனிதனின் மூளை -உடம்பின் உறுப்புகளிலேயே வியத்தகு ஆற்றலையும், எண்ணற்கரிய கூறுகளையும்கொண்ட ஒரு மண்டலம் எனலாம். மனிதனின் அறிவியல் அறிவு உருவாக்கியுள்ள நுட்பங்கள் மிகுந்த கணிப்பொறிகள் பல இணைந்தாலும் – ஒரு மூளையின் ஆற்றலுக்கு ஈடாகாது. அந்த மூளையின் திறனும் ஆற்றலும் மனிதன்குக் மனிதன் வேறுபடும் வகை நாம் கணக்கிடவியலாத ஒன்று. எனவே, மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட எண்ணமும் கருத்து ஓட்டமும் பெற்றிருப்பது இயற்கை.

இந்த வேற்றுமை இயல்பானது என்பதைக் கண்டுகொள்ளும் அறிவுதான் – பகுத்தறிவைப் பயன் உடையதாக்குகிறது.

பகுத்தறிவும் பொதுநோக்கும் :

ஒருகை விரல்கள் ஐந்தும் ஒன்றைப்போல் ஒன்று அமையாத்தாலேயே – அவை பயன் உடையதாகின்றன. அதைப் போன்றே வேறுபட்ட கருத்துகள் உருவாகும் இயற்கை உண்மையாலேயே உயர்ந்த பொதுநோக்கம் ஆகிய நடுவுநிலை நோக்கம் உருவாகும் வாய்ப்பு உளதாகிறுது.

கருத்து வேற்றுமை – முரண்பாடாய், மோதுதலாய் அரும்பி, உண்மை காணும் வாய்ப்பை உருவாக்கி, உடன்பாடு காண வழிகோலுகிறது. இல்லாதவிடத்தும் கருத்து வேற்றுமையைப் பொறுத்துக்கொள்ள, அதற்கும் இடம் உண்டு என்று தெளியும் ஒரு பொது நோக்கம் கொள்ள துணையாகிறது.

ஒவ்வொருவரிடமும் பொது அறிவும், பகுத்தறியும் முயற்சியும் வளர வளரத்தான் பகுத்திறவு ஆற்றல் உடையதாகிறது.

”தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு” – திருவள்ளுவர்

மண்ற்கேணி தோண்டும் அளவுக்கு ஏற்ப நீர் ஊறுவதைப் போன்று, கல்வி கேள்விகளின் அளவுக்கு ஏற்ப அறிவு சுரக்கும் என்பது பொருள். கற்றதையும் கேட்டதையும் பகுத்தறியும் போதுதான் அது தன்ன்றிவாகிறது.

பொதுவாக நோக்கின் நன்மையும் தீமையும் நாடி அறியும் அறிவே பகுத்தறிவு. நன்மை என்பதும் தீமை என்பதும் பலகாலமாக மனிதனிடம் படிந்த எண்ணத்தின் விளைவாகத் தோன்றுவதாலும், அவை காலத்தாலும் – சூழ்நிலையாலும் மாறுவதாலும், அவ்வாறு படிந்த எண்ணங்களையும் மறு ஆய்வு செய்வதிலேயே பகுத்தறிவு பயன் உடையதாகிறது.

அகத்தூய்மை செய்வது :

புறத்தில் காண்பவற்றை எளிதில் பகுத்தறிய முற்படுவதைப் போன்று – அகத்தில் படிந்துவிட்ட கருத்தைப் பகுத்தறியப் பலரும் முற்படுவதில்லை. முற்படினும் அகத்தில் படிந்து வேரூன்றிய கருத்துகளைப் பகுத்தறியும் ஆற்றலும் உரமும் எளிதில் வாய்ப்பதில்லை.

அவ்வாறு பழமையாய்ப் படித்த எண்ணங்களே – நம்பிக்கைகளாய் – சிலபல தெளிவற்ற பழக்க வழக்கங்களாய் – அவற்றின் பிறப்பிடமாய் அமைந்துவிடுகின்றன. மனிதனின் தன்னலம் – அதனால் பிறக்கும் குறுகிய நோக்கம் – அதற்குத துணையாகும் சாதி-குல வேற்றுமை முதலான தவறான கொள்கைகள் – மனிதரிடையே ஏற்றத்தாழ்வினைக் காத்துக் கொள்ளும் விருப்பம் ஆகியவை நிலைக்கவும் காரணமாகின்றன.

சமுதாயப் பணியாற்றச் செய்வது :

இவற்றைக் கடந்து மனித சமுதாய நலன் காணும் நோக்கம் கொள்ளவும், எல்லோரும் வாழ நாம் வாழ்வோம் என்று உணரவும், சமத்துவம் தெளியவும், பிறர் நலம் பேணவும் பகுத்தறியும் ஆற்றல் ஏதுவாகிறது.

மனிதன் தன் வாழ்வு – சமுதாய வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அந்தச் சமுதாய முன்னேற்றமும் நல்வாழ்வுமே தனக்கும் நன்மை பயப்பது என்பதையும், அந்தச் சமுதாய நலனுக்காகத் தன் நலனை இழப்பதும் விரும்பத்தக்கது என்பதையும் பகுத்தறிவால்தான் தெளிகிறான்; தெளிந்து உரைக்கிறான்.

தனக்காக வாழ்வதினின்றும் – தம்மவருக்காகவும் – நாட்டுக்காகவும், மன்பதைக்காகவும் வாழ எண்ணித் தலைப்படும் உணர்வை மனிதன் பெறுவது பகுத்தறிவு தந்த பரிசேயாகும்.

”சாதி இரண்டொழிய வேறில்லை”
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
”யாதும் ஊரே யாவருங் கேளிர்”
”அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி”
”வறியார்க்கொன் றீவதே ஈகை”
”பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”
‘நாடு வாழ வீடு வாழும்”
”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”

முதலான எத்தனையோ உயர் எண்ணங்களும் – பொது நோக்கங்களும் மனித சமுதாயத்தில் முகிழ்ப்பதற்கு வழி கோலியது மனிதனின் பகுத்தறிவே.

மனிதனாக உயர்த்துவது :

பிறப்பால் மனிதனாகப் பிறந்தவன், நினைப்பாலும் செயலாலும் மனிதனாக வாழவும், சமுதாயத்தின் வாழ்விலே தன் வாழ்வைக் கண்டு, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக உயரவும், பண்பில், சால்பில் சிறக்கவும் துணையாகும் பகுத்தறிவைப் பயன்படுத்தும் முயற்சி நாளும் ஓங்குக!

3. பெரியாரின் எண்ணங்கள் ஒரு புரட்சிக் கனல்

தமிழினத் தந்தை!

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்த (பெரியார்) ஈ.வெ. இராமசாமி அவர்கள் இன்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஒரு புதிய விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்கி, அறிவுப் புரட்சிக்கு வழிவகுத்து, மக்கள் தன்னம்பிக்கை கள்ளச் செய்தவராக விளங்குவதால், வரலாற்றில் போற்றிக் குறிப்பிட வேண்டிய ஒரு புதிய சகாப்தம் (புதிய நூற்றாண்டு) படைத்தவர் ஆவார். எனவே, பெரியார் அவர்களின் நூற்றாண்டு, தமிழர் வாழ்வு காண முற்பட்ட நூற்றாண்டாக, தன்மானமும், பகுத்தறிவும் முளைத்துத் தழைத்த நூற்றாண்டாக, தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுவது எல்லா வகையிலும் இன்றியமையாத்தொரு எழுச்சியூட்டும் கடமையாகும்.

புதிய எழுச்சிக் கொண்ட தன்மான உணர்வும் பகுத்தறியும் மனப்பான்மையும் கொண்ட தமிழினத்தை உருவாக்கிய தந்தை பெரியார், புதிய தமிழகத்தின் – தமிழ் இனத்தின் தந்தையாவார்.

இயற்கையிலேயே சுதந்திர உணர்வு :

செல்வச் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால், பிறர் த