1. காலத்தின் கட்டாயம்
இந்திய விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கி, சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியை ‘தேசப் பிதா’ என்று அழைக்கிறோம். ஜவஹர்லால் நேருவை ‘நல பாரதச் சிற்பி’ என்று பாராட்டுகிறோம். சர்தார் வல்லபாய் பட்டேலை தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ என்று குறிப்பிடுகிறோம். மௌலானா அப்துல்கலாம் ஆசாத்தை மதச்சார்பின்மையின் சின்னம் என்று வர்ணிக்கிறோம். ராஜாஜி என்றும், சி.ஆர். என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட ராஜாஜியை நமது காலத்தில் வாழ்ந்த ‘சாணக்கியர்’ என்று சொல்லுகின்றவர்களும் இருக்கிறார்கள்.
ராஜாஜி மிகச் சிறந்த அரசியல் மேதை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. ஆனால் அரசியல் தலைவர்களில் சற்று வித்தியாசமான தலைவராகவே அவர் வாழ்ந்தார். தன்னுடைய மனசாடசியின் காவலர் ராஜாஜி என்று காந்திஜி சொன்னபோதிலும், அவரைத் தன்னுடைய அரசியல் வாரிசாக காந்திஜி குறிப்பிடவில்லை. ஜவஹர்லால் நேருவைத்தான் தன்னுடைய அரசியல் வாரிசு என்று காந்திஜி சொன்னார். அவ்வாறு குறிப்பிடுகின்ற போதும், ராஜாஜி அல்ல, நேருதான் என்னுடைய அரசியல் வாரிசு என்று அழுத்தமாகச் சொன்னார். யார் வாரிசு என்று சொன்னது சரி, யார் வாரிசு இல்லை என்று காந்திஜி சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
ராஜாஜியை காந்திஜி தன்னுடைய மனசாட்சியின் காவலர் என்று ஏற்றுக் கொண்டார். ஆனால் அரசியல் வாரிசாக ஏற்றுக் கொள்ளவில்லை. இராஜாஜியின் திறமையிலோ, ஒழுக்கத்திலோ நேர்மையிலோ அல்லது ராஜதந்திர விவேகத்திலோ காந்திஜிக்கு எந்த விதமான சந்தேகமும் இருந்திருக்க வழியில்லை. ஆனால் ராஜாஜி எப்போதுமே பிரச்சினைக்குரிய மனிதராகவே இருந்தார். தனக்கு சரி என்று பட்டதை சாதிக்க முயல்வாரே தவிர, விட்டுக் கொடுத்து போகமாட்டார்.
நேருவுக்குக்கூட காந்திஜியிடம் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. காந்தி சொல்கின்ற பல விஷயங்கள் தனக்குப் புரியவில்லை என்று நேரு சொல்லி இருக்கிறார். இது பற்றிக் குறிப்பிடுகையில், நான் பேசுகின்ற பாஷை அவருக்குப் புரியவில்லை என்று நேரு பல சமயங்களில் சொல்லி இருக்கிறார். ஆனால் ‘இரண்டு இதயங்களின் சங்கமத்துக்கு பாஷை புரிய வேண்டிய அவசியமில்லை’ என்று காந்திஜி தெளிவு படுத்தினார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எனக்குப் பிறகு நேருதான் என்னுடைய பாஷையைப் பேசுவார் என்றும் சொன்னார்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. நேரு காந்திஜியிடமிருந்து கருத்து வேறுபட்ட காலத்திலும், காந்திஜியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர் இட்ட கட்டளையை அப்படியே ஏற்று செயல்பட்ட தலைவர் ஆவார்.
ஆனால் ராஜாஜியை அப்படிச் சொல்லிவிட முடியாது. காந்திஜியின் தலைமையை ராஜாஜி ஏற்றுக் கொண்டாரே தவிர, அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காலத்திலே அவரிடமிருந்து விலகி இருந்திருக்கிறார். ஒரு சமயம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து கூட ராஜாஜி விலகி இருந்து, அதன் செயல் திட்டங்களை எதிர்த்த காலமும் இருந்திருக்கிறது. ராஜாஜி தவறு இழைத்து விட்டார் என்று குறை சொல்லவும் முடியாது. தனக்கு ஒன்று சரி இல்லை என்று தோன்றினால், அதில் அவரால் பங்கேற்றுச் செயல்பட முடியாது.
தன்னுடைய கொள்கையிலே அல்லது நிலைப்பாட்டில் அவருக்கு இருந்த நம்பிக்கை என்றும் சொல்லலாம். பிடிவாத குணம் கொண்ட தலைவராக அவர் விளங்கினார் என்றும் விமர்ச்சிக்கலாம். அது பார்க்ககின்றவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்த விஷயம்.
ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பு, ஒரு தலைவருக்கு எந்தக் கருத்து இருந்தாலும், பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்கின்ற கருத்தை மதித்து நடக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால் ராஜாஜியைப் பொறுத்தவரையில் வாழ்க்கை முழுவதும் பெரும்பான்மையோர் கருத்திலிருந்து விலகி இருந்த தலைவராக அவர் வாழ்ந்திருக்கிறார்.
மற்ற தலைவர்களுடன் ஒத்துப் போகின்ற மனோபாவம் அவரிடம் மிகக் குறைவாகவே இருந்தது. அதனாலேயே இந்திய அரசியல் தலைவர்களின் மிகப்பெரிய மேதை என்று போற்றப்படுகின்ற நிலையில் அவர் இருந்தபோதும், வெகுஜன செல்வாக்குப் பெற்ற தலைவராக அவரால் விளங்க முடியாமல் போயிற்று.
ஆயினும், இந்திய அரசியலில் அவர் வகித்த பாத்திரத்தினை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அரசியலில் துறவி போல வாழ்ந்த பெருமைக்குரியவர் அவர். மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காக அவர் எதையும் சொன்னதில்லை. மக்கள் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களை அவர் சொல்லி இருக்கிறார். அதனால் தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை.
நம்பியதைச் சொன்னார். சொன்னதை நம்பினார் பாமர மக்களிடமிருந்து விலகி தங்க கோபுரத்தில் அமர்ந்து அவர் அரசியல் நடத்தியதாகக் கருதியவர்களும் இருக்கிறார்கள். அது உண்மையான கணிப்பல்ல. அவர் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் மக்களின் நலன் கருதியே சொன்னார். செய்தார். உடனடி நன்மைகளுக்காக, நீண்ட கால நன்மைகளை புறக்கணிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக எந்த விலையினையும் கொடுப்பதற்கும் அவர் தயாராகவே இருந்தார்.
ஆனால் பிற்காலத்தில், இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசாத மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்கிற நிலைமை தோன்றியபோது, அவரே இந்தியை எதிர்க்கவும் தயங்கவில்லை. வடநாட்டு அரசியல் தலைவர்கள், நாட்டுப்பற்று என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை உயர்த்தி, ஆங்கிலம் நீடிக்க வேண்டியதன் அவசியத்தினை வற்புறுத்தி தொடர்ந்து போராடினார்.
அவர் எதை செய்தாலும், மக்களின் நலனை முன்னிறுத்தியே செயல்பட்டார். உங்கள் நிலையினை அடிக்கடி மாற்றிக் கொள்கிறீர்களே என்று அவரிடம் கேட்ட போது, எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது கழுதையின் குணம் என்று விளகம் அளித்தார். அவருடைய தேசப் பற்றினை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் அவரை ஒரு சந்தர்ப்பவாதி என்று வர்ணித்தார்கள். நிச்சயமாக அந்த கணிப்பு அவரைப் பற்றிய தவறான மதிப்பீடாகும்.
ராஜாஜி ஒரு சுயசிந்தனைவாதி மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் என்பதற்காக, மலிவான காரியங்களை அவர் ஒரு போதும் செய்வதில்லை. ஒருவித்த்தில் அவர் மக்களிடமிருந்து விலகியே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் இருந்தது. பாமர மக்களின் செல்வாக்கினைப் பெறுவதற்கு சிலபல சாகசங்களைச் செய்வது அவசியம். அதை அவரால் செய்ய முடியவில்லை என்பதும் உண்மை.
தன்னுடைய அந்த பலகீனத்தை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் முதலமைச்சர் போன்ற பெரிய பதவிகளை அவர் வகித்திருந்தாலும், ஒருமுறை கூட அவர் தேர்தலில் நின்றதில்லை. எனினும் அரசியலில் நிலை கொள்வதற்கு சில சாமர்த்தியங்களை அவர் கையாண்டது உண்டு. அதன் விளைவாக ‘நவீன சாணக்கியர்’ என்கிற அடை மொழியாலும் அவர் அழைக்கப்பட்டதுண்டு.
நவீன இந்திய வராலாற்றை உருவாக்கியதில் ராஜாஜியின் பங்கு மகத்தானது. உயர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய தொண்டை எவரும் குறைந்து மதிப்பிட்டுவிட முடியாது.
அரசியல் நிர்பந்தத்தாலும், சமூகத் தேவைகளாலும் சிலர் அவரை சாதியவாதி போல சித்தரிக்க முயன்றதுண்டு. அவர் பிராமணராகப் பிறந்தாலும், பிராமணர்களுக்காக வாழ்ந்தார் என்பது நியாயமான குற்றச்சாட்டு ஆகாது. ஜாதிகள் கடந்த ஞானி அவர். அவருடைய ஜாதியைச் சார்ந்த சிலர் வேண்டுமானால், தங்களுடைய ஜாதிய வளையத்துக்குள் அவரை வைத்து அழகு பார்க்க விரும்பலாம். நிச்சயம் அது அவருக்குச் செய்கின்ற நீதியாக இருக்க முடியாது.
ஜாதி பேதமற்ற ஒரு இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றியபணி எந்த இந்தியத் தலைவரின் பணிக்கும் சற்றும் குறைந்ததல்ல. காங்கிரசுக்குள்ளேயே அவர் ஒரு தனி ஸ்தாபனமாக வாழ்ந்தார்.
பின்னர், சுதந்திரம் கிடைத்த பிறகு, காங்கிரஸை விட்டு வெளியேறி அவர் சுதந்திரக் கட்சி என்கிற தனிக்கட்சி கண்ட போதும், இந்தியப் பொருளாதாரம் விரைந்து வளர்ச்சி பெறுவதற்கு ஆட்சியாளர் கையாள வேண்டிய முறைகளை, திட்டங்கள் பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். அவருடைய பொருளாதார சிந்தனையிலிருந்து கருத்து மாறுபடுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவருடைய நோக்கத்தை சந்தேகிப்பது ஒரு மாபெரும் தேசபக்தரின் தியாக வாழ்க்கையினை கொச்சைப் படுத்துதவதாகும்.
இந்திய அரசியலில் ராஜாஜி ஒரு புதிய சகாப்த்த்தினை உருவாக்கினார். அவருடைய வாழ்வும் வாக்கும் காலத்தின் கட்டாயமாகத்தான் உருப்பெற்றன.
காங்கிரஸின் பொருளாதார சிந்தனைக்கு மாற்றுச் சிந்தனையினை உருவாக்குவதற்கு சுதந்திராக் கட்சியின் மூலம் அவர் முயற்சித்தார். அந்த முயற்சியால் அவர் வெற்றி பெறவில்லை என்பது உண்மை.
ஆனால், இந்திய வரலாற்றின், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை. இன்றைக்குப் பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அந்தச் சீர்திருத்தங்கள் மனிதாபிமான உணவர்வோடு, வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்களின் நலனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதுவே இன்றைய கோஷமாக இருந்து வருகிறது.
ராஜாஜியின் எழுத்துக்களைப் படித்தால் அவருடைய பொருளாதார சிந்தனை. ஏழை எளிய மக்களின் நலனையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது என்பதைத் தெளிவாகவே உணர முடிகிறது. இந்திய வரலாற்றில் உன்னத மனிதராக விளங்கிய ராஜாஜியின் வாழ்க்கயினை அனைவரும் படித்து உணர்வது அவசியம்.
அரசியலில் மட்டுமல்ல, இந்திய ஆன்மிக ஞானத்தை சரியான கோணத்தில் உணர்ந்த ஒருவராகவும் அவர் விளங்கினார். அவருடைய படைப்புகள், குறிப்பாக அவர் எழுதிய ராமாயணச் சுருக்கமும், மகாபாரதச் சுருக்கமும் பல லட்சம் மக்களால் இன்றைக்கும் படித்துப் பாராட்டப் படுகின்றன.
அவர் அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு பல்கலைக்கழகம் அதன் பல பரிமாணங்களையும் பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற முயற்சியே இந்த நூல்.
2. வளர்ச்சிப் பரிமாணம்
ராஜாஜி சேலம் மாவட்டத்திலுள்ள தொரப்பள்ளி என்கிற கிராமத்தில் அய்யங்கார் பிராமண வகுப்பில் பிறந்தார். தொரப்பள்ளி பெங்களூரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அவருடைய தகப்பனாரின் பெயர் சக்கரவர்த்தி அய்யங்கார். சமஸ்கிருத மொழியில் பாண்டித்யம் பெற்றவர். கிராம முன்சீப்பாக வேலை பார்த்தார். மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் அவருக்குச் சொந்தமாக இருந்த ஐந்து ஏக்கர் நன்செய் நிலத்தின் வருவாயிலிருந்து சிக்கனமாகக் குடும்பம் நடத்தி வந்தார்.
சக்கரவர்த்தி அய்யங்கார் தெய்வ பக்தி மிக்கவர். நாராயணின் நாமத்தை எப்போதும் ஜபித்தபடியே இருப்பார். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். பின்னர் அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. மூன்றாவதாகப் பிறந்த ஆண் குழுந்தை தான் ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் ஆவார்.
1878-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி ராஜாஜி பிறந்தார். சக்கரவர்த்தி அய்யங்கார் மகனின் பிறப்பு பற்றி சோதிடர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டார்.
ராம்பிரான், கிருஷ்ண பரமாத்மா, ஆதி சங்கர்ர், ராமானுஜர் ஆகியோரின் ஜாதக அமைப்பைக் குழந்தை கொண்டிருப்பதாகும், அரசு யோகமும், வனவாசத் துயரங்களும், குருவின் அந்தஸ்திலுள்ள வாழ்க்கையும் குழந்தைக்கு அமையும் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். சக்கரவர்த்தி அய்யங்கார் அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜாஜியின் பிற்கால வாழ்க்கையை வைத்துப் பார்க்கின்றபோது, ஜோதிடர்களின் கணிப்பு ஏறத்தாழ சரியாக இருந்ததாகவே கருத வேண்டி உள்ளது.
குழந்தைக்கு ராஜகோபாலன் என்று பெயரிட்டார்கள். பிறந்ததிலிருந்தே ராஜகோபாலன் சோனிக் குழந்தையாகவே இருந்தார். ஆனாலும் சிறுவனாக வளர்ந்தபோது, குறும்புத் தனத்துக்குக் குறைவில்லை. ராஜகோபாலனும், அவனுக்கு மூத்த சகோதரர்களும் சற்றுப் பெரிவர்கள் ஆனபோது சக்ரவர்த்தி அய்யங்கார் தன்னுடைய குடும்பத்தை தொரப்பள்ளியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒசூருக்கு மாற்றிக் கொண்டார். குழந்தைகளின் கல்விக்காகவே இந்த மாற்றத்தை செய்தார்.
ஓசூர் அப்படி ஒன்றும் பெரிய ஊரல்ல. ராஜகோபாலனின் கல்வி அங்கிருந்து கிராமத்துப் பள்ளியில் ஆரம்பமாயிற்று. ராஜகோபாலின் சூட்டிப்பு ஆசிரியர்ளை மிகவும் கவர்ந்தது. கேள்விகள் கேட்டு ஆசியரைத் துளைத்து எடுப்பது ராஜகோபாலுக்கு வழக்கம். ராஜகோபால் படித்த பள்ளிக்கு ஆய்வாளர் ஒருமுறை விஜயம் செய்தார்.
அந்த காலத்தில் ஆய்வாளர் வருகை என்றால் பள்ளிக் கூடம் அல்லோலகல்லோப்படுவது வழக்கம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பார்கள். மாணவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்துக் கொண்டே வந்த ஆய்வாளர் ராஜகோபாலிடம் எவரும் எதிர்பாராத வினோதமான கேள்வி ஒன்றினைக் கேட்டார்.
“கடவுள் என்ன நிறம் என்று உனக்குத் தெரியுமா?” என்பதுதான் அந்தக் கேள்வி.
ராஜகோபாலன் சற்றும் தயங்காமல் “கடவுள் நீல நிறம்” என்று பதில் சொன்னான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று ஆய்வாளர் திருப்பிக் கேட்டார்.
ராஜகோபால் சொன்னான்: “ஆகாயம் நீல நிறம். கடல்நீல நிறம், பெரும்பாலான பொருட்கள் நீல நிறம். ஆகவே கடவுளும் நீல நிறமாகத்தான் இருக்க வேண்டும்.
பையனின் சாமர்த்தியத்தைப் பார்த்த ஆய்வாளர் முதுகில் தட்டிக் கொடுத்ததோடு, “எதிர் காலத்தில் நீ சிறப்பாக வருவாய்” என்றும் ஆசிர்வதித்தார்.
ராஜகோபாலன் கெட்டிக்காரப்பையனாக இருந்தாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. கிட்டப்பார்வையால் அவதிப்பட்டான். ஆசிரியர்கள் அந்தக் குறையினை சக்ரவர்த்தி அய்யங்காரிடம் எடுத்துச் சொல்ல, அவர் உடனே மகனின் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.
ராஜகோபாலன் கெட்டிக்காரப் பையனாக இருந்தாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. கிட்டப் பார்வையால் அவதிப்பட்டான். ஆசிரியர்கள் அந்தக் குறையினை சக்கரவர்த்தி அய்யங்காரிடம் எடுத்துச் சொல்ல, அவர் உடனே மகனின் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.
ராஜகோபாலன் பள்ளிப் பாடங்களைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சிறு வயதிலேயே தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கினான். அவனுடைய வயதை ஒத்த சிறுவர்கள் பலர், பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் கூலி வேலை செய்து கடுமையாக உழைப்பதை கவனித்தார்.
பொதுவாக ஓசூரிலிருந்த பலரும் ஏழைகளாகவே இருந்தார்கள். தறியில் ஆடைகளை நெய்தல் அங்கே முக்கியத் தொழிலாக இருந்தது. தறியில் வண்ண வண்ண ஆடைகள் உருவாவதை ராஜகோபாலன் கண் கொட்டாமல் பார்த்து ரசிப்பான். பல்வேறு நிறத்திலுள்ள நூல்கள் ஒருங்கிணைந்து, பெறுகின்ற சித்திர வேலைப்பாடுடைய ஆடைகளாக உருப்பெறுகின்ற காட்சி அவனை மிகவும் கவர்ந்தது.
அதே சமயம், அவன் இன்னொன்றையும் கவனித்தான். இவ்வளவு அற்புதமான ஆடைகளை நெய்கின்றவர்கள் கந்தல் உடைகளை உடுத்திக்கொண்டு ஏழ்மையில் வாழ்வதையும் கவனித்தான்.
இது போன்ற ஏழ்மைக் காட்சிகள் சிறுவன் ராஜகோபாலன் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்த பிறகு கல்லூரிப் படிப்புக்காக ராஜகோபாலனை அவனுடைய தந்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். கல்லூரியி, ராஜகோபாலன் விரும்பிய சுதந்திரம் கிடைத்தது.
கல்லூரியில் ராஜகோபாலனுக்கு மூன்று ஆண்டுகள் சீனியரான நவரத்ன ராமராவின் நட்புக்கிடைத்தது. இந்த நட்பு கடைசிக் காலம் வரையிலும் நீடித்து.
ராஜகோபாலனின் ஆங்கிலப்பாட ஆசிரியரான பேராசிரியர் டேய்ட் ராஜகோபாலனின ஆங்கிப் புலமை வளர்வதற்கு பெரும் காரணமாக இருந்தார். அவர் அளித்த ஊக்கத்தால் ஆங்கில இலக்கியத்தையும் வரலாற்று நூல்களையும் படிக்கின்ற ஆர்வம் ராஜகோபாலனுக்கு ஏற்பட்டது.
ராஜகோபாலன் படித்த நூல்கள் சமுதாய சமுத்திரத்தைப் பற்றி பெரிதும் சிந்திக்க வைத்தன. நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றியும், இந்தியச் சமுதாயம் பிளவுபட்டுக் கிடப்பதைப் பற்றியும், கல்லூரி மாணவன் ராஜகோபால் சிந்திக்கத் தொடங்கினான்.
பட்டப்படிப்பில் ஆங்கிலப் பாடத்தில் நிறைய மதிப்பெண்கள் பெற்ற ராஜகோபாலன் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் சென்னை சட்டக் கல்லூரயில் சேர்ந்த பிறகுதான் தமிழ்த் தேர்வு எழுதி பட்டப் படிப்பை ராஜ கோபாலன் பூர்த்தி செய்தான்.
ராஜகோபாலன் இப்போது சட்டப் படிப்பும் படித்து வக்கீல் தொழிலுக்குத் தயாராகி விட்ட நிலையில், இனியும் ராஜ கோபாலன் என்று அழைக்காமல், புகழ் பெற்ற ‘ராஜாஜி’ என்கிற பெயரிலேயே இனி நாம் அவரை அழைக்கலாம்.
சென்னை வாழ்க்கையில் ராஜாஜி பல புதிய அனுபவங்களைப் பெற்றார். நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்று விளையாடுவது அவரது வழக்கமாயிற்று.
சட்டப் பிரச்னைகளைப் பற்றி பேசிக் கொள்வார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கம் இழைக்கின்ற அநீதிகள் பற்றி உரையாடுவார்கள்.
அதே சமயம் இந்திய சமுதாயத்திலேயே ஒருசாரார் தீண்டத்தகாதவர்ளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை எண்ணி மனம் புழுங்குவார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் எப்போது நீங்கும் என்று கவலைப்படுவார்கள்.
ராஜாஜி கல்லூரி நாட்களிலேயே நிறையப் புத்தகங்கள் படித்தார். ராஜாரா மோகன்ராயின் சீர்திருத்தக் கருத்துக்கள். பாலகங்காதர திலகரின் நாட்டுப் பற்றி. இத்தாலிய வீரன் கபால்டியின் போராடும் குணம். ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவ ஞானம் ஆகியவை கல்லூரி நாட்களிலேயே அவருடைய மனதில் ஆழப்படிந்திருந்த விஷயங்களாகும்.
சட்டக் கல்லூரயில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு இந்தியர்களின் வாழ்க்கை தன்னை மிகவும் பாதித்திருப்பதை உணர்ந்தார். ஒருவர் ஸ்வாமி விவேகானந்தர்.
சுவாமிஜி சிக்காக்கோ நகரில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிறகு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1897-ஆம் ஆண்டு சென்னை திரும்பியிருந்தார். சென்னையில் சுவாமிஜியின் உரையினைக் கேட்டு மூவர் பெரிதும் ஈர்க்கப் பட்டனர்.
ஒருவர் ராஜாஜி இன்னொருவர் சி.பி. ராமசாமி ஐயர். இவர் பின்னர் திருவிதாங்கூர் திவனாகப் பணியாற்றினார். மூன்றாமவர் கே.எஸ். ராமசாமி சாஸ்திரி. இவர் பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தவர்
ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்த இரண்டாவது இந்தியர் திலகர். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்’ என்கிற திலகரின் முழக்கம் சட்டக் கல்லூரி மாணவர் ராஜாஜியின் உள்ளத்தில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
சென்னை சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் ராஜாஜி சங்கீத விழாக்களுக்கு செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். மதம் சம்பந்தப்பட்ட பஜனைகளிலும் பங்கேற்பார். இதன் விளைவாக இந்து மத ஆன்ம ஞானத்தில் அவருக்கு தீவிரமான ஈடுபாடு ஏற்பட்டது. இந்து மத நூல்களை ஊன்றிப் படித்தார்.
இதுபோன்ற பயிற்சிகளின் விளைவாக, வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டங்ளையும் துக்கங்களையும் பாதிப்புகள் இல்லாமல் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் இளமைப் பருவத்திலேயே அவருக்கு உருவாயிற்று.
படிக்கின்ற காலத்தில் ராஜாஜி பொது வாழ்க்கையில் ஆர்வம் காட்டினாரே தவிர , அதில் தன்னை முழுமையக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணவில்லை.
தொழில் செய்யத் தயாராகி வாழ்க்கையினை சரியான முறையில் அமைத்துக் கொள்வதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது. குடும்ப நிலை அப்படி.
தந்தை சக்கரவர்த்தி அய்யங்கார் வக்கீல் தொழிலுக்குத் தயாராகிவிட தன்னுடைய மகனுக்குப் பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணம் முடிக்க விரும்பினார்.
ஆனால் ராஜாஜியின் தாயார் தன்னடைய மரணத்தறுவாயில் உறவுப் பெண்ணான அலுமேலுமங்கை என்பவளைத்தான் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வாக்குறுதியைப் பெற்றிருந்தார். இந்த விஷயம் சக்கரவர்தி அய்யங்காருக்குத் தெரியாது.
ராஜாஜி தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகின்ற விதத்தில் தந்தையின் சம்மதத்தோடு அலமேலு மங்கையையே திருமணம் செய்து கொண்டார்.
இருபது வயதில் சட்டப் படிப்பை முடித்தார். வக்கீல் தொழிலை எங்கே ஆரம்பிப்பது என்பதில் பிரச்சினை எழுந்தது. சென்னையில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் குறைவாகவே இருந்தன.
சேலத்தில் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்தார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சேலத்தில் வக்கீல் தொழில் பார்த்த சர்.சி. விஜயராகவாச்சாரியார் தொழிலில் புகழ் பெற்று விளங்கினார். தவிர, தேசிய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் அவர் இருந்தார்.
சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்குப் பல திறமைசாலிகளைக் கொண்டு வந்த பெருமை சேலம் விஜயராகவாச்சாரியாருக்கு உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆங்கிலப் பேச்சாற்றலில் உலகப் புகழ் பெற்ற மகாகனம் சீனிவாச சாஸ்திரி ஆவார்.
சேலம் கல்லூரியில் சீனிவாச சாஸ்திரியார் பேராசிரியாராக இருந்தார். எனவே வக்கீல் தொழிலில் பயிற்சி பெற விஜயராகவாச்சாரியாரை தன்னுடைய குருவாக ராஜாஜி ஏற்றுக் கொண்டார். அவருடைய மேற்பார்வையில் இருபது ஆண்டுகாலம் சேலத்தில் வக்கீலாக ராஜாஜி பணியாற்றினார்.
அப்போதெல்லாம் ராஜாஜியின் நோக்கம் சிறந்த வக்கீல் எனப் பெயர் வாங்க வேண்டும் என்பதாக மட்டும்தான் இருந்தது.
தொழிலை ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே சேலத்தில் சிறந்த வக்கீல்களில் ஒருவராக ராஜாஜி மதிக்கப்பட்டார்.
சட்ட நுணுக்கங்களை விளக்குவதிலும், தன்னுடைய கட்சிக்காரின் சார்பாக சிறந்தமுறையில் வாதிடுவதிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். சரளமான ஆங்கிலப் பேச்சாற்றலும் அவருக்குக் கைகொடுத்து உதவியது.
ராஜாஜியின் நினைவாற்றல் பிரசித்தமானது. வழக்குகளின் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி , அதிலுள்ள நியாயங்களை எடுத்துக் கூறுவதில் தன்னிகரற்று விளங்கினா. நீதிபதிகள் அவருடைய நினைவாற்றலைப் பார்த்து வியந்தார்கள்.
வழக்குகள் அவரைத்தேடி வந்தன. வருமானமும் குவிந்தது. குதிரை பூட்டிய வண்டியில் நீதிமன்றத்துக்கு செல்கின்ற அளவுக்கு அவருடைய வசதி வளர்ந்தது.
அதாவது சொந்தமாக அவர் குதிரை வண்டி வைந்திருந்தார். டென்னிஸ் விளையாடுவார். உள்ளூர் பொழுதுபோக்குக் கிளப்பில் உறுப்பினர் ஆனார்.
மாலை நேரங்களில் அங்கு அவர் சீட்டு விளையாடுவதும் உண்டு. அதேசமயம் நண்பர்களுடன், வரலாற்று விஷயங்களையும் நாட்டு நடப்புகளையும் விவாதிப்பார்.
விஜயராகவாச்சாரியாரின் கீழ் வக்கீலாகப் பணியாற்றிய காலத்தில், தேசிய இயக்கத்தின் போக்குகள். செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
அந்தக்காலத்தில் நாடெங்கும் இருந்த வழக்கறிஞர்கள் தேசிய் போராட்டத்தின்பால் இழுக்கப்பட்டு, வருமானம் நிறைந்த தங்களுடைய வக்கீல் தொழிலை உதறித் தள்ளிவிட்டு, தேச சேவைக்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். குறிப்பாக, மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து, காங்கிரஸ் பேரியக்கத்தில் பங்கேற்கத் தொடங்கியபோது, வக்கீல்ள் மட்டுமின்றி கல்லூரிப் பேராசிரியர்களிலிருந்து தொழிலதிபர்கள் வரை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்க முன் வந்தார்கள்.
காந்திஜியின் மந்திர சக்தி தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களையும், சாதி மத மொழி இன வேறுபாடு இன்றி அவர்பால் ஈர்த்தது. அந்த ஈர்ப்புக்கு ராஜாஜியும் தப்பவில்லை.
3. காந்திஜியின் அழைப்பு.
சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் காந்திஜியின் பிரவேசம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் இந்தியப் பத்திரிகைகளில் செய்தியாகி, குறிப்பாக படித்த மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்தச் செய்திகள் ராஜாஜியின் மனதையும் பெரிதும் பாதித்தது. நிற வேற்றுமைகள் எந்த அளவுக்கு மனிதர்களை வெறித்தனம் கொண்டவர்களாக ஆக்கி விடுகிறது என்பதை எண்ணி ராஜாஜி வருந்தினார்.
தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒரு சாரார் தீண்டத்தகாதவர்ளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை எண்ணிப் பார்த்தார். அந்தச்சமயம், தென்னாப்பிரிக்காவில் காந்திஜியோடு பழகிய சிலர் சேலத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்திஜி ஆற்றிவரும் பணிகளைப் பற்றி ராஜாஜி தெரிந்து கொண்டார். நிற ஆதிக்கத்தை எதிர்த்து காந்திஜி நடத்திய அறப் போரட்டம் ராஜாஜியைப் பெரிதும் சிந்திக்க வைத்தது.
சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கு காந்திஜி கையாண்ட அதே ஆயுத்த்தை இந்தியவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏன் கையாளக் கூடாது என்று ராஜாஜி சிந்திக்கலானார். காந்திஜியைப் பற்றி மேலும் மேலும் கிடைத்த தகவல்கள். ராஜாஜியின் மனதில் ஆழமாகப் பதிந்து, அவரைத் தன்னுடைய குருவாக எண்ணுகின்ற அளவுக்கு ராஜாஜியின் மனம் பக்குவப்பட ஆரம்பித்திருந்தது. இந்த மாற்றம் ராஜாஜியிடம் திடீரென்று ஏற்பட்டுவிடவில்லை. காந்திஜியின் செயல்பாடுகள் சிறிதுசிறிதாக ராஜாஜியின் மனதில் பெரிய மாற்றத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
ராஜாஜியின் வக்கீல் தொழில் சேலத்தில் பிரமாதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறந்த கிரிமினல் வழக்கறிஞர் என்கிற புகழுடன் விளங்கினார். சிறுவயதில் இருந்த ஏழ்மை நீங்கி, இப்போது சிறப்பான வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனாலும் அந்த வாழ்க்கை நிறைவானதாகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு பெரிய லட்சியத்தை அவருடைய மனம் தேடிக் கொண்டே இருந்தது. குறிப்பாக காந்திஜியின் அஹிம்சைத் தத்துவத்தில் இந்தியத் திருநாட்டில் பூர்வீக ஞானம் அடங்கியிருப்பதைப் போலவே அவருக்குத் தோன்றியது.
இந்திய நாட்டின் பிரச்சினைகளை புதிய கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தார். காந்திஜியைப் பற்றி கிடைத்த தகவல்கள், துண்டு பிரசுரங்கள் ஆகிய அனைத்தையும் ஊன்றிப் படித்தார். காந்திஜியிடம் சந்திப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே, அவரைத் தன்னுடைய மானசீக குருவாக ராஜாஜி ஏற்றுக்கொண்டு விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் ராஜாஜி வாழ்க்கையை பாதித்த ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. கொலைக்குற்றம் புரிந்த ஒரு குற்றவாளிக்காக வாதாடி, அவனுக்கு விடுதலையும் பெற்றுத் தந்து விட்டார்.
அரசுத் தரப்பில், தன்னுடைய குற்றத்தை நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும், ராஜாஜி சாமர்த்தியமாக வாதாடி, குறுக்கு விசாரணையில் சாட்சிகளைத் திணற அடித்து, குற்றவாளிக்கு விடுதலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். அவரைப் பொறுத்தவரையில்,தீர்ப்பு அளித்தது அவருடைய வேலையாக இருக்கவில்லை. அது நீதிபதியின் வேலை. தன்னுடைய கட்சிக்காரருக்காக வாதாட வேண்டிய கடமை மட்டும் தான் அவருடையது. அதற்காக கட்சிக்காரர் அவருக்கு உரிய பணமும் கொடுத்திருக்கிறார்.
ராஜாஜி தன்னுடைய தந்தையாருடன், வழக்கில் வெற்றி பெற்றதற்காக அவரைப் பாராட்ட வந்த நண்பர்களுடனும் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அது இரவு நேரம். வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி அவருடைய வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை அவன் கொடுத்துவிட்டான். பின்னர் எதற்காக அவன் வருகிறான் என்று ராஜாஜிக்கு விளங்கவில்லை. எழுந்து அவனை நோக்கிச் சென்றார். அவன் அவரை வணங்கி நன்றி தெரிவித்தான். தனக்கு விடுதலை கிடைப்பது சாத்தியமில்லாத நிலையிலும், விடுதலை வாங்கிக் கொடுத்ததற்காக அவரைப்பாராட்டினான். அதாவது மறைமுகமாக, அவன் கொலை செய்த்தை அவன் ஒப்புக் கொண்டுவிட்டான்.
அதற்குப் பிறகு அவன் விடுத்த வேண்டுகோள் அதிர்ச்சி ஊட்டுவதாக இருந்தது.
கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய கத்தியை திரும்ப몮ப பெற்றுத்தரும்படி வேண்டிக்கொண்டான். அந்தக் கத்தி பரம்பரையாகத் தன்னுடைய குடும்பத்தில் பாதுகாக்கப் பட்டு வருகிற பூர்வீக சொத்து என்றும் சொன்னான்.
ராஜாஜி குற்ற உணர்வால் தாக்கப்பட்டார். அங்கிருந்து உடனே போகும்படி அவனிடம் கூச்சலிட்டார். அவன் போன பிறகும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. திரும்பி வந்து ராஜாஜி தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டார்.
‘பணத்துக்காக உடலை விற்கின்ற விலை மாதுவைக் கூட என்னால் மன்னித்துவிட முடியும். அறிவை விபச்சாரம் செய்கின்ற வழக்கறிஞரை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். வக்கீல் தொழிலை விட்டுவிடும் சந்தர்ப்பத்திற்காக நான் காத்திருக்கிறேன்.’
மகனின் இந்த வாசகங்களைக் கேட்ட தந்தை அதிர்நுத போனார். ஆனால் ராஜாஜியின் மனதில் ஓர் உறுதியான போராட்டம் நடைபெற்றது.
ஆனால் தொழிலை விடுவதற்கு முன் தேவையான பணத்தை அவர் சம்பாதிக்க வேண்டி இருந்தது. அன்றிலிருந்து, தன்னிடம் வருகின்ற ஒவ்வொரு வழக்கின் தராதரத்தை சரியாக ஆராய்ந்த பிறகே ஏற்றுக் கொண்டார். ஏற்றுக்கொண்ட சில வழக்குகளுக்கும் அதிகமான தொகை கேட்டார்.
தொழிலில் அவருக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய விஜயராகவாச்சாரியார், தேச சேவை செய்ய வேண்டும் என்கிற ராஜாஜியின் எண்ணத்துக்கு ஊக்கம் அளித்தார்.
சேலத்தில் ராஜாஜி வழக்கறிஞராக இருந்த போது பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சேலம் முனிசிபல் கவுன்சிலில் உறுப்பினராகவும் பின்னர் அதன் சேர்மேனாகவும் ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்கின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சேலத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகவே இருந்தார்கள்.
கைத்தறித் தொழில்தான் பிரதான தொழிலாக இருந்தது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ராஜாஜி கவனம் செலுத்தினார். நியாயமான ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினார். அருகிலிருந்த பள்ளிக் கூடங்களுக்கு அவர்களைப் போக வைத்தார்.
குறிப்பாக ஏழை ம