சென்னை: அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிக் கடன் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டசபையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
3 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தீர்களே எத்தனை பேருக்கு வேலை வழங்கியுள்ளீர்கள் என்று இங்கே கேட்டனர். தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 195 பேருக்கு வேலை வழங்கியுள்ளோம். எஞ்சியிருக்கும் 2 ஆண்டுகளில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு தரமுடியும்.
தனியார் துறை மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.
19 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
பணிக்கொடை உச்சவரம்பு ரூ.3.5 லட்சமாக இருந்ததை ரூ.10 லட்சமாக முதல்-அமைச்சர் உயர்த்தியிருக்கிறார்.
6-வது சம்பள கமிஷன் வருகிறவரை சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் ரூ.6 லட்சமாக இருந்தது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ரூ.7.5 லட்சமாக இருந்தது. அவர்கள் இப்போது நாங்கள் தான் அதிக சம்பளம் வாங்குகிறோமே, கடன் தொகையையும் உயர்த்தக் கூடாதா? என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் ரூ.15 லட்சமாகவும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ரூ.25 லட்சமாகவும் வழங்கப்படும் என்று நேற்று இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி [^] ஆணை பிறப்பித்துள்ளார்.
அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கு ரூ.1 கோடி வழங்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதன் காரணமாக அங்கு பயின்ற தமிழ்நாட்டை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 46 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.
Leave a Reply