எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி

posted in: மற்றவை | 0

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2003ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் இதுவரை 30 முறை இது போல் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு உதவி செய்யும் வகையில் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் விதமாக பாகிஸ்தான் இது போன்ற செயல்களை செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் குமோன் 8 ராணுவ படையை சேர்ந்த மொகிந்தர் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்றொரு ராணுவ வீரர் மயிரிழையில் உயர் தப்பினார்.

இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்றார்.

இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க இருக்கின்றனர். இது இந்தாண்டு பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *