தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகமே சமத்துவபுரமாக மாற அனைவரும் பாடுபடுவோம் என்று பேசினார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் மல்லிகைப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, மின் ஊடகத் தொலைத் தொடர்பு (விடியோ கான்ஃபரசிங்) மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி.

பின்னர் அவர் பேசியதாவது:

”நாடு விடுதலை பெற்றபின் சாதி பேதம் ஒழிய, தீண்டாமைக் கொடுமை அகல பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆனாலும், சாதியும் மதமும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்து மக்களிடையே பகைமை உணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதற்குக் கருவியாகவும், காரணமாகவும் இருக்கின்றன.

இந்த நிலையில், சாதி வேறுபாடுகளை முற்றிலும் மறந்து தமிழ்ச் சமுதாயம் ஒரே சமுதாயமாக வாழவேண்டும் என்கிற குரல், மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக் திமுக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

இந்தியாவின் சுதந்திரப் பொன்விழா கொண்டாடப்பட்ட 1997-ம் ஆண்டு, ‘தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்’ என்று அறிவித்தேன்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் 1998-ம் ஆண்டு திறந்து வைத்தேன்.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி நடைபெற்ற 2001 மே மாதம் வரை தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால், 2001-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களால் முறையாகவும், சரியாகவும் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டு தொய்வுற்றது.

அடுத்து, 2006-ம் ஆண்டு மீண்டும் திமுக அரசு அமைந்த பிறகு பெரியார் நினைவு சமத்துவபுரக் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ. 14 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அவை செப்பனிடப்பட்டன.

தந்தை பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்தார்.

பெரியார் சிலையை ஓரிடத்தில் அமைப்பதைக் காட்டிலும், 95 சமத்துவபுரங்களை அமைக்கவும், அதன் ஒவ்வொரு முகப்பிலும் பெரியார் சிலையை நிறுவவும் அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஏற்கெனவே அரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து 95 சமத்துவபுரங்களை அமைக்கும் பணி முடிவுற்ற பின், பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டம் மல்லிகைப்பட்டியில் பெரியாரின் உருவச்சிலையுடன் 8.67 ஏக்கரில் ரூ. 2 கோடியே 23 லட்சம் செலவில் தமிழகத்தின் 146-வது பெரியார் நினைவு சமத்துவபுரம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் வலுப்பெறவும், சாதி சமயற்ற, சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படவும் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழவும் மொத்தத்தில் தமிழகமே சமத்துவபுரமாக வளர்ச்சி அடைய அனைவரும் பாடுபடுவோம், பணியாற்றுவோம்” என்றார் கருணாநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *