நம் எதிரி இந்தியா அல்ல, தலிபான் தான்: சர்தாரி

posted in: உலகம் | 0

லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட இதே கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்த அவர் அங்கு ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர்களிடையே அவர் பேசுகையில், பாகிஸ்தானின் உண்மையான எதிரி தலிபான்கள்தான். இந்தியா எங்களது எதிரி அல்ல. இந்தியாவால் எங்களுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை.

ராணுவ ரீதியாக இந்தியா எங்களுக்கு மிரட்டலாக இல்லை. அதேபோல பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. உண்மையான எதிரி, மிரட்டல் தலிபான் தீவிரவாதிகள்தான்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்திற்கே பெரும் மிரட்டலாக தலிபான்கள் உள்ளனர். எனவேதான் நாங்கள் தற்போது தலிபான்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறோம்.

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த சர்வாதிகார அதிபர் (முஷாரப்) இதை சரியாக கணிக்கவில்லை. கவனிக்கவும் இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அரசு அதுகுறித்து கவனத்துடன் உள்ளது என்றார் அவர்.

இதேபோன்ற கருத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *