பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்’ என்று கூறிய பிரபல சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு

posted in: மற்றவை | 0

leader023புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:-

பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார்.

அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனது கருத்தைக் கூறியமைக்காக சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இந்நாட்டில் சோதிடர்கூட தனது கருத்தைக் கூறமுடியாதுள்ளது.

இதுதவிர, யுத்தம் இப்போது முடிவுற்றபோதிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் முடியவில்லை. பாதைகள் அடிக்கடி மூடப்படுகின்றன. அமைச்சர்கள் பலத்த பாதுகாப்புடன்தான் பயணிக்கின்றனர்.

அப்போது வீதிகள் மூடப்பட்டு மக்கள் கடுமையாக சோதிக்கப்படுகின்றனர். இந்நடவடிக்கை மக்களை மிகவும் பாதிக்கின்றது. இது நிறுத்தப்படவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *