கடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது.
உயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.
டெல்லியில் இருந்து அலிபுர்தவார் ரயில் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது மகாநந்தா விரைவு ரயில். எட்டாவா ரயில் நிலையத்தில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய மனநிலை தவறிய வாலிபர் ஒருவர் சடசடவென ரயிலின் கூரை மீது ஏறிவிட்டார்.
ரயில் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அவரை கீழே வரச் சொல்லி கூக்குரல் இட்டனர். ஒரு சிலர் கூரைமீது கைக் கொடுத்து, பிடித்துக் கொண்டு இறங்கச் சொல்லி கெஞ்சினர். ‘டேய் உயிர் போயிடும்டா வந்துடா’ என்று அவர்கள் இறஞ்சிய எதையும் அந்த வாலிபர் சட்டை செய்யவில்லை.
சடாரென எழுந்து ரயில் கூரையின்மீது நடந்த அவர், ஏதோ துணி காயப்போடும் கொடியைத் தொடுவது போல மின்சார ஒயரை ஒருமுறை தொட்டார். பாய்ந்த மின்சார போதை பற்றவில்லையா, ஏதோ உடலில் பாய்ந்த உயிர் போகும் போதையா… மீண்டும் ஒரு முறை மின்சார ஒயரை தன் கைகளால் தொட்டார். அணைத்தவனை விட்டுவிடுமா என்ன மின்சாரம்? அவனுக்குள் பாய்ந்து அரவணைத்த அடுத்த நொடி உயிரை எடுத்துவிட்டு உடலை கிழே போட்டுவிட்டது. ரயில் கூரைமீது அந்த வாலிபர் எரிந்து கரிகட்டையானது பிறகு நடந்த கதை.
நிமிடத்திற்குள் நடந்துவிட்ட இந்த கோர சம்பவத்தை யாரோ ஒரு புண்ணியவான் விடியோ எடுத்திருக்கிறார். யார், என்னவென்று தெரியவில்லை.
இப்போது தான் அதை அவர் வெளியி்ட்டிருக்கிறார். அது இ.மெயிலில் பறந்து கொண்டிருக்கிறது. பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
ஒரு நிமிடம் கூட ஓடாத இந்த விடியோ நமக்கு உயிரின் மதிப்பை அறிய வைப்பதுடன், காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பதையும் ஒருங்கே உணரச் செய்கிறது.
Leave a Reply