மே.வங்க நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்க வேட்டை : விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேடல்

posted in: மற்றவை | 0

tblfpnnews_78076899052கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் லால்கார்க் பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் கும்பலை ஒடுக்குவதற்கு, விமானப்படை ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன. நக்சலைட்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையும் நேற்று களத்தில் இறங்கியது.


மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள லால்கார்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, நக்சலைட்கள் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் இங்கு பதுங்கியுள்ளனர். இங்கு பதுங்கிருந்தபடியே, தொடர்ந்து வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். போலீசாரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் தனிக் குழு அமைத்து, நக்சலைட்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். நக்சலைட்களை ஒழிக் கும் நடவடிக்கையில், மேற்கு வங்க அரசு நேற்று முன்தினம் முழு வீச்சில் களம் இறங்கியது. மேற்கு வங்க போலீசாருடன், மத்திய துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்த கூட்டு பாதுகாப்புப் படை லால் கார்க்கிற்கு விரைந்தது. லால்கார்க் நோக்கிச் செல்லும் அனைத்து வழிகளிலும் மரங்களை வெட்டிப் போட்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வழியில் உள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் வீடு, வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் வேட்டை: இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக விமானப்படையும் நேற்று களத்தில் இறங்கியது. காரக்பூர் அருகேயுள்ள விமான தளத்தில் இருந்து கிளம்பிய விமானப் படை ஹெலிகாப்டர்கள், லால்கார்க் அருகே உள்ள பீம்பூர் என்ற இடத்தில் நேற்று தரையிறங்கின. உயர் அதிகாரிகள் உத்தரவு கிடைத்ததும், நக்சலைட்களுக்கு எதிரான வேட்டையில் ஹெலிகாப்டர் படை எந்த நேரத்திலும் பங்கேற்கும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, ஹெலிகாப்டர்கள் மூலமாக லால்கார்க் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. அவற்றில், நக்சலைட்களுக்கு உதவ வேண்டாம் என்றும், நக்சலைட்களின் பாதுகாப்பு அரணாகச் செயல்பட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேற்கு வங்க போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: லால்கார்க்கிற்கு செல்லும் வழியில் ஜிட்கா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி, நக்சலைட்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கு, நக்சலைட்கள் மிகப்பெரிய அளவில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாருக்கு எதிரான மக்கள் குழு சார்பில் இதுவரை பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது, சந்தேகத்தை அதிகரித்துள்ளது. போலீசாரை கண்ணி வெடியில் சிக்க வைப்பதற்காக அவர்கள் அமைதி காப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, கண்ணி வெடிகள் உள்ளனவா என சோதனை நடத்திய பின்னரே தொடர்ந்து முன்னேற முடியும். லால்கார்க்கிற்கு செல்லும் மற்ற வழித்தடங்களான தாகிஜுரி மற்றும் தெருவா ஆகிய இடங்களில் ஏற்கனவே சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இங்குள்ள மரப்பாலமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால்,பாதுகாப்புப் படையினர் மெதுவாகவே முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நக்சலைட்களை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையும், ஜிட்கா வனப்பகுதியில் தங்களது தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

திரிணமுல் மறுப்பு: திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய் கூறியதாவது: நக்சலைட்களுக்கு திரிணமுல் கட்சியினர் ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளதை ஏற்க முடியாது. நக்சலைட்களின் தாக்குதலையோ, கொள்கையையோ நாங்கள் என்றுமே ஆதரித்தது இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். லால்கார்க்கை பொறுத்தவரை போலீசாரின் நடவடிக்கையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நக்சலைட்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்க முடியாது: சிதம்பரம் பேட்டி: மத்திய அமைச்சரவைக் கூட்டத் திற்கு பிறகு நேற்று டில்லியில் நிருபர்களை உள்துறை அமைச்சர் சிதம்பரம் சந்தித்து, மே.வங்கத்தில் நக்சலைட்களைச் சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கூறியதாவது: மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கை முடிய சற்று காலம் பிடிக்கும். பழங்குடியின மக்கள் சிலரும் நக்சலைட்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டு வருகின்றனர். எனவே, போலீசாரின் நடவடிக்கை மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் உள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை முடிய காலக்கெடு எதுவும் நிர்ணயித்து விட முடியாது. மத்திய ரிசர்வ் படையினரை கூடுதலாக மாநில அரசு கேட்டால், அது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயார். நக்சலைட்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில அரசு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உறுதுணையாக இருக்கும். நக்சலைட் போன்ற பயங்கரவாத இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு, குறிப்பிட்ட யோசனையுடன் கூடிய திட்டத்துடன் மாநில அரசுகள் மத்திய அரசை அணுக வேண்டும். திட்டமிடப்படாத அணுகுமுறையுடன் மத்திய அரசிடம் மாநில அரசுகள் வருவதில் பயனில்லை. தடை ஏன் இல்லை? நக்சலைட்களுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கையை போர் என்று கருதக்கூடாது. அவ் வாறு கூறுவதும் ஏற்கத்தக்கது அல்ல.

சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கும் எண்ணமெல் லாம் மத்திய அரசுக்கு கிடையாது. அம்மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை விடுவிக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை என்று மட்டும் தான் இதை பார்க்க வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆயுதம் தாங்கி போராடும் வழிகளை ஏற்க முடியாது. இப்பிரச்னை விஷயமாக நாளை(இன்று) அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டில்லியில் பிரதமரையும் என்னையும் சந்தித்துப் பேசவுள்ளார். சம்பவ இடத்திற்கு நான் செல்லும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் நக்சலைட் இயக்கத்தை தடை செய்திருக்கும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் தடை இல்லை என்பது குறித்து அம்மாநில அரசு தான் கூற வேண்டும். இந்த பிரச்னையில் காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் நக்சலைட்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படுவது தவறு; ஏற்க முடியாது. நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, பேச்சுவார்த் தைக்கு முன்வர வேண்டும். தற்போது லால்கார்க்கில் துவங்கியுள்ள ஆபரேஷன், பங்குரா மற்றும் புருலியா மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *