ஸ்டிரைக்கைத் தொடர்ந்தால் ஒரு சலுகையும் கிடைக்காது – ஊழியர்களுக்கு என்எல்சி நிர்வாகம் மிரட்டல்

posted in: மற்றவை | 0

நெய்வேலி: ஸ்டிரைக்கை உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் கைவிட்டு விட்டு பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சலுகையும் கிடைக்காது என்று என்.எல்.சி முதன்மை பொது மேலாளர் எச்சரித்துள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் என்எல்சி நிர்வாகம் அழைத்துப் பேசியது.

பின்னர் இதுகுறித்து முதன்மைப் பொது மேலாளர் லூர்துஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்ட நாளில் தகுதி பெற்றிருந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

மருத்துவ வசதிக்கு 200 பேருக்கு அடையாள புத்தகம் வழங்கப்பட்டது. ஜூலை 1 முதல் மேலும் பலருக்கு வழங்கப்படும். 4,000 பேரின் ஆவணங்கள் சரிபார்த்த பின், இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்க்கப்படுவர்.

போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களின் பெயர்களை இன்கோசர்வ் சொசைட்டி உறுப்பினராக சேர்ப்பதற்கு பரிசீலிக்க மாட்டோம். ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய சலுகைகளை தரவும் பரிசீலிக்க மாட்டோம். தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினால் மட்டுமே அவர்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் என்று எச்சரிக்கையும் வகையில் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் 3வது நாளாக இன்றும் தொடருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *