“சென்னை: “”இந்தியாவில் வளர்ந்து வரும் துறை அனிமேஷன். இத்துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ளது,” என்று “அனிமேஷன்’ துறையின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சோனி இமேஜ் ஒர்க் இந்தியா நிறுவனத்தின் “டிஜிட்டல் எபக்ட்ஸ்’ மேற்பார்வையாளர் சோபன்பாபு தெரிவித்தார்.
மதுரை, அருப்புக்கோட்டை சாலை, டி.வி.ஆர்., நகரில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. தமிழகத்திலேயே முதன் முறையாக பி.எஸ்சி., பட்டப்பிரிவில் “அனிமேஷன்’ பாடப்பிரிவை இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சார்பில் “அனிமேஷன் துறையின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று சென்னை, குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சோனி இமேஜ்ஒர்க் இந்தியா நிறுவனத்தின் “டிஜிட்டல் எபக்ட்ஸ்’ மேற்பார்வையாளர் சோபன்பாபு கலந்து கொண்டு பேசுகையில்,”அனிமேஷன் துறையில் இந்திய மாணவ, மாணவிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இத்துறையின் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றவகையில் பாடப்பிரிவில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் துவக்கப்பட்டுள்ள “அனிமேஷன்’ பிரிவில், அனைத்து விதமான பாடப்பிரிவுகளும் உள்ளன. எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஹாலிவுட் படங்களான “லாட் ஆப் த ரிங்ஸ்’ “ஸ்பைடர்மேன்’, “ஐ ஆம் லெஜன்ட்’ , “டெர்மினேட்டர்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளோம்.
தற்போது, ஒவ்வொரு துறையிலும் 20 சதவீத “அனிமேஷன்’ துறையின் பங்கு உள்ளது. இத்துறையில் சிறந்து விளங்க நமக்கு தெரிந்ததை மற்றவர்களிடம் விளக்கும் திறமை வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக “அனிமேஷன்’ உள்ளது,’ என்றார். சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் “அனிமேஷன்’ துறை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டபூபதி பேசுகையில்,” அனிமேஷன் என்பது வாழ்க்கையில் ஒருங்கிணைந்து விட்டது. திரைத்துறை, கம்ப்யூட்டர் விளையாட்டு, “டிவி’ விளம்பரங்களில் “அனிமேஷன்’ தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இத்துறையின் வளர்ச்சி 8 சதவீதம் இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 25 சதவீதத்திற்கும் மேல் இருக்கும். வரும் 2013ம் ஆண்டில் “அனிமேஷன்’ துறைக்கு 3.5 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர்.
ஆனால், அனிமேஷன் துறை பற்றி முழுமையாக கற்றுத்தரும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. தமிழகத்தில் அக்குறையை போக்கும் வகையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, நவீன தொழில்நுட்ப முறையில் “அனிமேஷன்’ துறையினை அறிமுகப்படுத்தியுள்ளது,’ என்றார். கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் பேசுகையில்,”கலை ஆர்வம், ஓவிய திறமை உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் “அனிமேஷன்’ கல்விக்கு தகுதியானவர்கள். “அனிமேஷன்’ என்பது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பு. அப்பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு, அனுபவம் பெற்ற கல்வியாளர்கள் ஆகிய அனைத்தையும் சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரி செய்துள்ளது. மாணவர்களுக்கு உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் உடற்பயிற்சி மையம், நீச்சல்குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பெண்கள், ஆண்களுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. “அனிமேஷன்’ துறை படிப்பிற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். நடுத்தர மக்களும் கல்வி கற்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்விக்கட்டணத்திற்கு வங்கி கடன் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு இல்லாத படிப்புகளை துவங்க எங்கள் கல்லூரி நிறுவனர் லட்சுமிபதி அனுமதிக்க மாட்டார். எனவே, “அனிமேஷன்’ துறை கல்வியை முடித்தவுடன் வேலை வாய்ப்பும் கல்லூரி சார்பில் ஏற்படுத்தி தரப்படும்,’ என்றார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கருத்தரங்க முடிவில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
Leave a Reply