ஆண்டுக்கு 8 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கூடுதல் கட்டணம்

03-cooking-gas200டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சிலிண்டர் வரை மட்டுமே அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு முழு பணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும். அரசின் மானியம் கிடைக்காது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இப்போது ஒரு சிலிண்டர் ரூ.315.95க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 500க்கு மேலாகும். அரசு ரூ. 200 வரை மானியம் தருவதால் நமக்கு ரூ.315.95க்கு கிடைக்கிறது. இந் நிலையில் தான் 8 சிலிண்டெருக்கு மேல் வாங்குவோர் அதை ஒரிஜினல் விலையில் வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கிராமப்புற மக்களுக்கு சூரிய ஒளி அடுப்பு, சூரிய ஒளி குக்கர், சூரிய ஒளி மின் விளக்கு உள்ளிட்டவற்றை மானிய விலையில் அளித்து மண்ணெண்ணெய் மானியத்தை முற்றிலுமாக நீக்கலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உர மானியம் அளிப்பதற்கு பதிலாக விளைச்சலுக்கேற்ப ஊக்கத் தொகை அளிக்கலாம் என்றும், விவசாயிகளே விலையை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2008-09ம் நிதி ஆண்டில் உணவு மானியமாக மத்திய அரசு ரூ. 32,667 கோடியை செலவிட்டுள்ளது. ரேஷன் மூலம் அரிசி, கோதுமையை மானிய விலையில் வழங்கவும் இதிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த மானியம் ரூ. 43,668 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சலுகை விலையில் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு வசதியாக உணவுக் கூப்பன்களை அறிமுகப்படுத்தலாம் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த கூப்பன்கள் மூலம் ரேஷன் கடை மட்டுமின்றி தாங்கள் விரும்பும் இடத்தில் பொருள்களை மக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் வசதிகள் செய்யலாம் என்றும் கூறப்பட்டு்ள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை..

இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

வேண்டுமானால் பெட்ரோலியப் பொருள்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியைக் குறைத்து விலையைக் குறைத்துக் கொள்ளலாம்.

சாமானிய மனிதர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மிகக் குறைந்த அளவுக்கு விலையை அதிகரித்துள்ளோம். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை அரசு உயர்த்தவில்லை என்றார்.

ஏமாந்த ஜனம்..சிலிண்டர் விலை ரூ.1.40 உயர்வு:

சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை என மத்திய அரசு அறிவித்தாலும் அதன் விலை சிலிண்டருக்கு ரூ.1.40 வரை அதிகரித்துள்ளது.

ரூ.314.55 ஆக இருந்த சிலிண்டர் இப்போது ரூ.315.95க்கு வினியோகிக்கப்படுகிறது. ஏஜென்சிகளின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகரிக்கப்பட்ட கமிஷனை பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்காமல் அதை பொது மக்கள் தலையில் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *