சென்னை : “”ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இவற்றில், எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பதை தெரிந்து கொள்ளலாம்,” என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக நரேஷ் குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை நான்கு கோடியே 16 லட்சத்து 41 ஆயிரத்து 299ஆக இருந்தது. இதில், மக்கள் தொகை அடிப்படையில், 18 வயது முதல் 24 வயதினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த வயதுடையவர்கள் தங்களது படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் கவனம் செலுத்துவர் என்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பித்திருக்க மாட்டர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. எனினும், இதர வயதுடையவர்களது எண்ணிக்கை மக்கள் தொகையுடன் ஒத்துப்போகவில்லை. 2007ம் ஆண்டுக்கு முன், இடமாறிய வாக்காளர்கள், பல இடங்களில் ஒரே பெயர் உள்ளவர்கள் என பட்டியலில் ஏராளமான பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவை நீக்கப்பட்டதால் தான், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது.
லோக்சபா தேர்தலின் போது, பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், விடுபட்டதாகவும் ஏராளமான புகார்கள் சென்னை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து தான் வந்தன. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அதிகளவு பெயர்கள் விடுபட்டதாக புகார் இல்லை. மெட்ரோ நகரில், அடிக்கடி இடம் மாறுவது சகஜம். புதிய விலாசத்துக்கு செல்வோர், ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டை இருப்பதால் பெயர் பதிவு செய்யத் தேவையில்லை என விட்டுவிடுகின்றனர். எனினும், 2008ல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொண்ட பின், புதிதாக பெயர் சேர்க்க மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மக்கள் பெயர்களைச் சேர்த்திருக்கலாம்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை, அதை முறைகேடாக பயன்படுத்த முடியாது என பல முறை தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது. புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இரண்டு தயாரிப்புகள் உண்டு. பெங்களூரு, “பெல்’ நிறுவனத்தின் தயாரிப்பு தவிர, ஐதராபாத்தின் இ.சி.ஐ., நிறுவனமும் இயந்திரங்களை தயாரிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பழையதாகிவிட்டதால், படிப்படியாக அவை மாற்றப்படும். தற்போது நடக்கவுள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கு, பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து புதிதாக மின்னணு இயந்திரங்கள் வரவழைக்கப்படும். இந்த புதிய இயந்திரங்களின் சிறப்பம்சம், எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டு பதிவானது என்பதை தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பது தெரிந்துவிடும்.
தமிழகத்தில் இடைத்தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த, மாநில அரசு இயந்திரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் அதில் பங்கு கொள்ள வேண்டும். சில கட்சிகள் புறக்கணிக்கும் விஷயத்தில், இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நலத்திட்டங்களை பொறுத்தவரை, தற்போது இடைத்தேர்தல் நடக்கும் ஐந்து தொகுதிகள் இடம்பெற்றுள்ள ஆறு மாவட்டங்களிலும் (இளையான்குடி தொகுதி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குள் வருகிறது) நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, இந்த ஆறு மாவட்டங்களிலும் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது.
அரசு துவக்கும், மருத்துவ காப்பீடு திட்டத்தையும் இடைத்தேர்தல் முடியும் வரை இந்த ஆறு மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடாது. இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு, வாக்காளர்களைக் கவரும் வகையில் இருக்குமா என்பதை தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்கப்படும். இடைத்தேர்தலில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஓட்டுப்பதிவு விவரங்களை அவ்வப்போது தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை என, 9, 11, 1, 3 மணி வரை ஓட்டுப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும். 3 மணிக்கு மேல், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், 4 மணிக்கு மேல் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்
Leave a Reply