தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.

இதற்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில் கல்விக் கவுன்சில் வழங்கியுள்ளது.

இவை தவிர 36 கல்லூரிகள் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளன. ஜூலை 10ம் தேதியன்று தொடங்கும் பொது கவுன்சிலிங்கில் சேர இந்தக் கல்லூரிகளும் ஆவலுடன் உள்ளன.

35 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது.

தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 348 ஆகும். இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 346 சீட்கள் உள்ளன.

அங்கீகாரம் பெற்ற 35 கல்லூரிகளில் ஏற்கனவே 12 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே இவர்கள் ஜூலை 10ம் தேதி தொடங்கும் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 70 புதிய கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கீகாரம் கிடைத்துள்ள பெரும்பாலான புதிய கல்லூரிகள் கோவை பிராந்தியத்தில் வருகின்றன. இவை அனைத்தும் கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படும்.

இங்கு மட்டும் 11 புதிய கல்லூரிகள் வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 35 கல்லூரிகளிலும் தலா 240 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் மேலும் 36 கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்து விட்டால் தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி விடும். இதன் மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சீட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *