பிளஸ்டூ முடிவு வெளியான 10 நாளில் கவுன்சிலிங்’

posted in: கல்வி | 0

சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

பொறியியல் படிப்பில் சேர பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற 30 மாணவ-மாணவிகள் முதலில் அழைக்கப்பட்டு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,

200க்கு 200 மதிப்பெண் பெற்ற 43 பேர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களில் 10 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 30 பேர் என்ஜினீயரிங்கில் சேர்கிறார்கள். இவர்களில் 21 பேர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவையும், 4 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 4 பேர் மெக்கனிக்கல் பிரிவையும், ஒருவர் ஆட்டோமொபைல் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.

யாரும் தகவல் தொழில்நுட்பப் பாடப்பிரிவை தேர்வு செய்யவில்லை. இவர்களில் 28 பேர் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

புதிதாக 85 கல்லூரிகள் அனுமதிக்கு விண்ணப்பித்ததில் இன்று வரை 37 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில் 366 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுமாக மொத்தம் 391 கல்லூரிகள் உள்ளன.

இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 85,000ல் இருந்து 1 லட்சத்து 930 ஆக உயர்ந்துள்ளன.

படிப்படியாக என்ஜினீயரிங் இடங்கள் மேலும் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களில் கவுன்சிலிங் தொடங்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவுக்கான 3,523 இடங்களுக்கு நடந்த கவுன்சிலிங்கில் 2,291 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,232 இடங்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும்.

அதே போல வெளி மாநில மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 52 இடங்களில் சேர ஒருவரும் வரவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *