மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி!

07-malaysia-tamils200கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இடத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனராம்.

சம்பந்தப்பட்ட பகுதியின் பெயர் கம்புங் லொராங் புவா பாலா. பினாங்கு மாகாணத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் முற்றிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களே வசித்து வருகின்றனர். பல பரம்பரைகளாக இந்த இடத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையி்ல் இந்த இடத்தின் உரிமையாளர்கள் தமிழ்க் குடும்பங்களை இடத்தை விட்டுக் காலி செய்யுமாறு கூறியுளளனராம். அங்கு வளர்ச்சித் திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளப் போகிறார்களாம்.

ஆனால் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம் என தமிழர்கள் கூறயுள்ளனர். இதுகுறித்து கிராம குடியிருப்பாளர்கள் சங்க கமிட்டி கூறுகையில், இந்த இடத்தை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. மாறாக குத்தகைக்கு எடுத்துதான் தங்கியுள்ளோம்.

99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம். இந்த குத்தகை 2107ம் ஆண்டுதான் முடிவுக்கு வருகிறது.

இந்த இடத்தில்தான் தொடர்ந்து இருக்க விரும்புகிறோம். நிவாரணமோ அல்லது இழப்பீடோ நாங்கள் கோரவில்லை. மாறாக எங்களுக்கு உரிமை உள்ள இடத்தை விட்டு நாங்கள் போக மாட்டோம் என்கிறார்கள்.

இதுகுறித்து 84 வயது முதியவரான திரவியம் கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இடத்தை காப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் உறுதியளித்திருந்தார் என்றார்.

கிராம குடியிருப்பாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன் கூறுகையில், இடைக்கால தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

ஜூலை 11ம் தேதிக்குள் இவர்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *