ராணுவத்துக்கு ஆயுதம் வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தில் கோல்ப் விளையாடிய அதிகாரிகள்

posted in: மற்றவை | 0

12_006ராணுவத்துக்கு ஆயுதம் மற்றும் உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் கோல்ப் விளையாட்டுக்கான பொருட்களை அதிகாரிகள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.


அரசின் செலவுகள் குறித்து கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பது வழக்கம். அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கை அறிக்கையில் ராணுவ அதிகாரிகள் கோல்ப் விளையாட்டுக்காக பொருட்களை அரசு நிதியில் இருந்து வாங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலப்பரப்பில் ராணுவ கோல்ப் கிளப் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான வாடகையான ரூ.54.95 கோடியை அரசுக்கு அதிகாரிகள் செலுத்தவில்லை. ஆனால், இங்கு விளையாட வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாடகையாக வரவேண்டிய ரூ.54.95 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள ராணுவ கோல்ப் மைதானங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கணக்கு தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.

முதியோர், ஊனமுற்றோரை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் வாங்குவதாகச் சொல்லி கோல்ப் விளையாட்டு பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படும் வண்டிகளை ரூ.1.17 கோடிக்கு வாங்கியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. எல்லையில் சத்தமில்லாமல் வேவு பார்க்கும் 22 வாகனங்கள் வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், இவை எங்கு உள்ளன என்பது பற்றி ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *