வாஷிங்டன் : அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் உயர் தலைவர்களைக் கண்டறிந்து அழிக்கும், ரகசியத் திட்டத்திற்கு, கடந்த 2004ம் ஆண்டு, அமெரிக்க உளவுத் துறையினர், “பிளாக் வாட்டர்’ எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக, முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க, உளவுத் துறையினர், பயங்கரவாதிகளைக் கண்டறிந்து அழிக்கும் பணிக்காக, பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்தனர். ஆனால், அவர்களின் முயற்சி, வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அவர்கள், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க, உளவு நிறுவனங்கள் சமீப ஆண்டுகளாக, சிறையில் இருக்கும் கைதிகளிடம் விசாரணை நடத்துவது உட்பட, மிக முக்கியமான சில விவகாரங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்து வருகின்றன. ஆனால், இவ்வாறு ரகசியத் திட்டங்களில், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதால், அவ்விவகாரத்தின் ரகசியத் தன்மையை பாதுகாப்பது என்பது கவலையளிப்பதாக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்க உளவுத்துறையினர், தனியார் நிறுவனங்களுடன் அதிகாரப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. ஆனால், பிளாக் வாட்டர் நிறுவனர் எரிக் டி.பிரின்ஸ், உட்பட சில தனியார் நிறுவனங்களின் உயர் தலைவர்களுடன், தனி ஒப்பந்தம் ஒன்றை செய்தனர். எனினும், அமெரிக்க உளவுப் பிரிவு தலைவராக லியான் இ பானெட் பதவியேற்பதற்கு ஓராண்டுக்கு முன்பே, பிளாக் வாட்டர் நிறுவனத்தின், பணி, முடிவடைந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply