டெல்லி: நாட்டில் பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்த வர்த்தகத்தை அடியோடு நிறுத்த அரசுக்க்கு பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
டெல்லியில் வரும் திங்களன்று நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடுக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் அறிவுரை வழங்கவும் முடிவு செய்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நாட்டில் பரவலாக வறட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் 600 மாவட்டங்களில் 161 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நடந்த தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ஆன் லைன் வர்த்தகம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உணவு தானிய முன்பேர வர்த்தக முறையை (ஆன்லைன்) தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.
இதனால், பதுக்கலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் முன்பேர வர்த்தகத்தை தடை செய்யுங்கள் என்று முதல்வர்களை பிரதமர் கேட்டுக் கொள்வார் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply