கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கட்டுரைகள் வெளியிட்டதற்காக இலங்கையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரும், பத்திரிகையாளருமான திசநாயகம், கடந்த 2008 மார்ச்சில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து பணம் பெற்று, அவர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதியதாகவும், இதன்மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு இலங்கை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “அரசின் சட்ட விதிமுறைகள், பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளன. அதே நேரத்தில், வன்முறையை தூண்டும் வகையில், தவறான தகவல்களை வெளியிடுவதற்கு சட்டம் அனுமதி அளிக்கவில்லை’என, வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் அடுத்து, நீதிபதி தீபாலி விஜேந்திரா தீர்ப்பு வழங்கினார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், புலிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதற்காக,திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். திசநாயகத்தின் வக்கீல், “ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்படும்’என்றார்.
Leave a Reply