பயங்கரவாதிகள் காலத்துக்குத் தகுந்தவாறு புதிய யுத்திகளை வகுத்தும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தங்களை வலுப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் கடுமையாக உள்ளது என்றார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி.
ரசாயன பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கையை ஏ.கே. அந்தோனி தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு பேசுகையில் பயங்கரவாதிகள் நடவடிக்கை குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் தங்களை வலுப்படுத்தி வரும் அதேவேளையில் அவர்களை சமாளிக்க ராணுவமும் தயாராகி வருகிறது. அந்தவகையில் தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ரசாயன பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் ராணுவத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ரசாயன பயங்கரவாதத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ரசாயன பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளை எவ்வாறு கண்காணிப்பது, உளவுத் தகவலை திரட்டுவது போன்ற நோக்கத்துடனும் இந்த வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தோனி தெரிவித்தார்.
தயாராக உள்ளோம்: இந்தியா பல்வேறு வழிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. இதை சமாளிப்பதற்கு நாம் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் எவ்வித பயங்கரவாத நடவடிக்கையையும் சமாளிக்க இந்தியா தயாராகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர் என்.சி.விஜ் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை பேரிடர் மேலாண்மை குறித்த படிப்பை பாடமாக வைக்க வேண்டும். பொறியியல், மருத்துவ கல்லூரிகளிலும்கூட இதை பாடமாக வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply