பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு இன்று வாழ்விலோர் திருநாள்: கருணாநிதி அறிக்கை

posted in: மற்றவை | 0

050பல வருடங்களாக மூடிக்கிடந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி மு.கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

இன்று வாழ்விலோர் திருநாள். அய்யன் திருவள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும், கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும், நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும், பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் படத்தினை திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும், அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.

வள்ளுவரும், அவர் தந்த குறளும் இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உரத்தையும் தரத்தையும் தந்து வருகின்றன. வள்ளுவர் தந்திருக்கும் குறள் உலகத்தின் பொதுச் சொத்து என்ற கருத்தை பரப்ப வேண்டும் என்று அண்ணா கூறினார். 1948ல் பெரியாரோ திருக்குறள் மாநாடே கூட்டினார். 1953ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் இருந்தபோது, கைதிகள் மத்தியில் திருக்குறள் பற்றி உரையாற்றினேன். 1963ம் ஆண்டு பேரவையில் வள்ளுவர் படம் வைக்க வேண்டினேன்.

பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் வள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தந்தால் அதை வைக்க ஆட்சேபணை இல்லை என்றார். நான் எழுப்பிய அந்த கோரிக்கை 22-3-1964ல் திருவள்ளுவர் படத்தினை குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தபோது நிறைவேறியது. திருவள்ளுவர் தினம் ஆண்டு தோறும் கொண்டாட வேண்டுமென்று கூறினேன். 30-10-1969ல் எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவினை தொடர்ந்து ஆண்டு தோறும் பொங்கல் விழாவுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அரசாணை 3-11-1969ல் வெளியிடப்பட்டது.

அது போல, 1973ல் மயிலை திருவள்ளுவர் நினைவாலய திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, வள்ளுவருக்கு தமிழக தலைநகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். 18-9-1974ல் வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, திறப்பு விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களை தீட்ட 8-1-1976ல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் திறப்பு விழாவை அரசு முன்னின்று நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 31ம் தேதி மாலை யிலேயே திமுக அரசு கலைக்கப்பட்டு விட்டது.

1976ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை. அன்று, ‘கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப் படுகிறது’ என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு மடல் தீட்டியிருந்தேன். அந்த கடிதத்தின் ஒரு சில பத்திகளை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்..

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய் காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி யாய் நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய் எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான் மகிழ்வான் தகதகவெனக் குதிப்பான்தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ் மறைக் கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது. இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம். அந்த நாள் தானே இந்த நாள். கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று இடைக்காடர் கூற, அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா. புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா.

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல. எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம். அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மண விழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்.

அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று ஆம். என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.

அன்றையதினம் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து 31-12-1975ல் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயர வள்ளுவர் சிலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதமே அரசு கலைக்கப்பட்டு விட்டது. 1989ம் ஆண்டு மீண்டும் திமுக அரசு ஏற்பட்டவுடன் 6-9-1990ல் நானே சென்று குமரி முனையில் சிலை அமைப்பு பணியை தொடங்கி வைத்தேன். 1991ல் அரசு மாறியது. சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயர வள்ளுவரின் சிலை நிர்மா ணிக்கப்பட்டு 1-1-2000ல் திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.சுனாமி பேரலைக்கே ஈடு கொடுத்து அந்தச் சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

அந்த விழாவிலே மறைந்த கோவை செழியன் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்து பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று மூப்பனார் என்னைக் கேட்டார். குமரி அனந்தன் கோபாவேசமாக பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் முடிவுரை ஆற்றினேன்.

அப்போது, ‘நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை வந்து, தமிழக முதலமைச்சர் கலைஞர் விரைவிலே எங்கள் ஊருக்கு வர வேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்தபோது, பெங்களூருக்கு நான் வருவதென்றால், நான் அங்கே கலந்து கொள்கின்ற முதல் விழா, வள்ளுவர் சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்Ó என்று சொல்லிவிட்டேன் என்று கூறினேன்.

தமிழ்ச் சங்கம் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு சிலை நிர்மாணித்து 1-9-1991ல் அப்போது முதலமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில் கர்நாடக அமைச்சர் கே.ஜே. ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடு செய்தது. நீதிமன்ற தடை காரணமாக அது நடைபெறவில்லை. சிலை அமைக்க பெங்களூரு மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21-9-1991ல் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்தான் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார். மணவிழா அழைப்புகளில் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும் ஒரு வாரத்திற்கு முன்பே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன். எனவே இன்று வாழ்விலோர் திருநாள் என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே?

இவ்வாறு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *