மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களைக் காப்பதைவிட பணம் படைத்த முதலாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டினார்.
மதுரையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன வெள்ளி விழா மற்றும் 9-வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இடதுசாரிகள் தேசிய அளவில் உருவாக்கிய மாற்று அணியை மக்கள் ஏற்கவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளைத் தோற்கடிப்பதற்காக அனைத்துக் கட்சிகளுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக சந்திக்கும்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரானது: மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தவுடன் உள்நாட்டு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது.
இந்நிலையில், “இறுதி பயன்பாட்டுக் கண்காணிப்பு உடன்பாடு’ என்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவிடமிருந்து பெறப்படும் ராணுவ தளவாடங்கள் தொடர்பானவற்றை இந்தியாவில், அமெரிக்கா எந்த நேரத்திலும் ஆய்வு செய்யலாம் என்பது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரானது.
ஏனென்றால் நாட்டின் ராணுவம் தொடர்பான விஷயங்கள், ரகசியம் காக்கப்பட வேண்டும். இந்த உடன்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களைக் காப்பதை விட பெரும் முதலாளிகளுக்கு உதவிகரமாகவே உள்ளது.
நாடு முழுவதும் பெரும் முதலாளிகளிடமிருந்து வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரியை வசூலித்தாலே இந்தியாவின் பல்வேறு உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியும். இதை காங்கிரஸ் அரசு செய்யத் தவறிவிட்டது என்றார். முன்னதாக மாநாட்டுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் எம்.எஸ்.என்.ராவ் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பிரதீப் பிஸ்வாஸ், சி.ஐ.டி.யு. தமிழ் மாநிலக் குழுச் செயலர் பா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply