விரைவில் மதுரையில் ‘சிப்பெட்’ நிறுவனம் : மத்திய அமைச்சர் அழகிரி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

tblfpnnews_94901239872சென்னை : “”நவீன வசதிகளுடன் கூடிய, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கழகம் (சிப்பெட்) ஒன்று மதுரையில் விரைவில் அமைக்கப்படும்,” என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை சிப்பெட் நிறுவனத்தில் உயர் கல்வி மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று கிண்டியில் நடந்தது. விழாவில், “சிப்பெட்’ டைரக்டர் ஜெனரல் நாயக் வரவேற்றார்.

ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறை செயலர் பிஜோய் சட்டர்ஜி பேசியதாவது: பிளாஸ்டிக் தொழில் இந்தியாவில் சிறுதொழிலாகவே அமைந்துள்ளது. தற்போது, 55 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்களை 200 நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதனால், பிளாஸ்டிக் தொழிலில், கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் பெரிய தொழிலாக பிளாஸ்டிக் தொழில் வளர்ந்துள் ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு பிஜோய் பேசினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி அடிக்கல் நாட்டி பேசியதாவது: முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை கூறி வருகின்றனர். அதுபோல், நீங்கள் ஆலோசனைகளை கூறவேண்டும் என, முதன்மை செயலர் பரூக்கி என்னிடம் கோரிக்கை வைத்தார். அப்போது, மேலூர் சட்டசபை தொகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடக்கும் ஒரு மில்லை திறக்க வேண்டும் என, அவரிடம் கூறினேன். நான் நேரிடையாக சென்று பார்த்தபோது அந்த மில் திறக்க முடியாத நிலையில் இருந்தது. இயந்திரங்கள் அனைத்தும் பழுதாகி கிடந்தன. இதையடுத்து, கீழையூரில் கிரானைட் கற்களை பாலீஷ் போடும் தொழிற்சாலையை உருவாக்கி தரவேண்டும் என, அவரிடம் யோசனை தெரிவித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தென்மாவட்டங்களுக்கு நிறைய தொழிற்சாலைகள் வேண்டும் என, கேட்டேன். அதற்கு, “நீ இடத்தை கூறு; எத்தனை தொழிற்சாலைகள் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்று முதல்வர் கூறினார். உடனே, மாவட்ட கலெக்டர்களை அழைத்து அரசு நிலங்களை கணக்கெடுக்குமாறு கூறியுள்ளேன். தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இந்த வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஒரு “சிப்பெட்’ விரைவில் மதுரையில் அமைக்கப்படும். இவ்வாறு அழகிரி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *