வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்களையும் சொத்துக்களையும் சிறிலங்காவிடம் கையளிக்க வேண்டும்: கோத்தபாய கோரிக்கை

posted in: உலகம் | 0

ltte-arasiyalவெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களின் சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இரகசிய நடவடிக்கை ஒன்றின் மூலம் கடத்தப்பட்டு பின்னர் வானூர்தி மூலமாக கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட செல்வராசா பத்மநாதன் தற்போது சிறிலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

“விசாரணைகளின்போது சிறிறு சிறிதாக அவர் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்” என பி.பி.சி.க்குத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, “கடந்த 30 வருட காலமாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் அனைத்துலக சந்தையில் கொள்வனவு செய்வதற்கான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதனே பணியாற்றி வந்துள்ளார்” எனவும் குறிப்பிட்டார்.

நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவுக்காக நன்கு வடிவமைக்கப்பட்ட வலை அமைப்பு ஒன்றை வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு வைத்திருந்ததாகக் குறிப்பிடும் பி.பி.சி., வெளிநாடுகளில் வர்த்தக நிலையங்கள் முதல் கப்பல் போக்குவரத்து வரையில் பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகள் முதலீடு செய்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்டதாக இருப்பதால் வெவ்வேறான பெயர்களில் இவ்வாறான முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பி.பி.சி.யின் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் இவ்வாறான முதலீடுகள் தொடர்பாக செல்வராசா பத்மநாதன் விசாரணைகளின்போது தெரிவித்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

“இந்தச் சொத்துக்கள் விடுதலைப் புலிகளுடையவை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் அந்தச் சொத்துக்களையும், அந்த நாடுகளில் மீதமாகவுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையும் சிறிலங்காவிடம் கையளிக்க வேண்டும்” என கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியிருக்கின்றார்.

“பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் மேற்குலக நாடுகள் உண்மையிலேயே தீவிரமாக இருந்தால், விடுதலைப் புலிகள் போன்ற ஒரு அமைப்புக்கு அவை அடைக்கலம் கொடுக்கக் கூடாது” எனவும் கோத்தபாய ராஜபக்ச கோரியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *