திருவாரூர் : பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் திருவாரூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைந்துள்ளது என்று, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் டெல்டா மாவட்டங்களில் பயிர், நிலங்களை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். காஞ்சிக்குடி அரசு விதைப் பண்ணை, மத்திய அரசின் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கரும்பு துல்லிய பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை அளவு 1,230 மி.மீ., நடப்பு ஆண்டில் இதுவரை 343 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. மொத்த சாகுபடி பரப்பு மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 43 ஏக்கர். இதில், 25 ஏக்கர் மட்டும் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்ய முடியும். மீதமுள்ள மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 43 ஏக்கர் நிலம் ஆற்று தண்ணீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பான 90 ஆயிரம் ஏக்கரில் 33 ஆயிரத்து 175 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 56 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பு சாகுபடி குறைந்துள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் சம்பா சாகுபடி மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 868 ஏக்கரில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவையான உரம் இருப்பு உள்ளது. இதுவரை வணிக வங்கிகள் மூலம் 104.3 கோடி, கூட்டுறவு வங்கிகள் மூலம் 16.78 கோடி என மொத்தம் 121.08 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
Leave a Reply