வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
இந்தப் பிரபாகரன்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை நாடிச் செல்வதோடு, சிங்களவர்கள் மீதும் பகைமை கொள்வர் என்று மங்கள சமரவீர எம்.பி. நேற்று முன்தினம் கூறினார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் “மக்கள் சக்தி” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
இந்த வருடம் மே மாதம் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது நாம் அனைவரும் கட்சி பேதமின்றி சந்தோஷமடைந்தோம். நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படும் என்றும், தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும், அபிவிருத்தி ஏற்படும் என்றும் நாம் எதிர்பார்த்திருந்தோம்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அரசினால் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களின் மனங்களில் விரோதத்தைத்தான் விதைக்கின்றது அரசு.
இடம்பெயர் முகாம்களில் உள்ள அகதிகளை அரசு மிக மோசமாக நடத்துகின்றது. இதனால் அந்த மக்கள் மத்தியில் மீண்டும் நூற்றுக்கணக்கான பிரபாகரன்கள் உருவாக்கப்படுகின்றனர். ஜனாதிபதிதான் இதைச் செய்துகொண்டிருக்கின்றார்.
அந்த பிரபாகரன்கள், மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தை மாத்திரமன்றி, முழு சிங்கள மக்களையும் விரோதிகளாகப் பார்ப்பர். அவர்கள் பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்வர்.
இங்கு ஜனநாயகம் முற்றாகச் சீரழிந்துவிட்டது. லஸந்த விக்ரமதுங்க மற்றும் மகேஸ்வரன் பா.உ. ஆகியோரின் கொலைகள் தொடர்பான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
நல்ல முறையில் இலாபம் கிடைத்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் இப்போது பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. கொழும்புத் துறைமுகமும் நட்டத்தில் இயங்குகின்றது. இவற்றை மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவால் எந்த நட்டத்தையும் ஈடுசெய்ய முடியாது. அதற்கான திறமை அவரிடமில்லை. அவரின் ஊழல், மோசடியில் இருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்றவேண்டும்.
ஏப்ரல் மாதத்திற்கு முன் இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைக்கும். என்றார்.
Leave a Reply