சென்னை மாநகராட்சி 77-வது வார்டில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா செனாய்நகரில் நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏழை குடும்பங்களுக்கு கலர் டி.வி.யை வழங்கி பேசிய பொழுது இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுமென்றார்.
கலர் டி.வி.யை வழங்கி பேசியதாவது:-
உலக நடப்புகளை அறிவதற்காக முதல்- அமைச்சர் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி உள்ளார். அண்மையில் ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி மறைவு குறித்த தகவல்களை தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் அறிந்தோம்.
இந்தியாவில் தலைசிறந்த முதல்-அமைச்சர் யார் என்பதையும் அனைவரும் அறிவோம். மக்கள் நலனை மனதில் வைத்து இரவு-பகல் பாராமல் உழைத்து வருபவர் நம் முதல்வர்.
அனைவரும் சமச்சீரான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு சில மெட்ரிக்குலேசன் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து தவறான கருத்தை பரப்பி வருகின்றன. அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.
நாம் நம்முடைய தமிழை கற்றுக்கொடுக்க போகிறோம். கல்வியில் வேறுபாடு இருக்க கூடாது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல் படுத்தாத பல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு கோடியே 30 லட்சம் இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்படும். மேலும் 25 லட்சம் இலவச கலர் டி.வி.க்கள் ரூ.500 கோடியில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply