கொல்கத்தா: உரிய நஷ்ட ஈடு கொடுத்தால் சிங்கூர் நிலத்தை திருப்பித் தந்துவிடுவதாக டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் எந்த முதலீடும் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். ஆனால் இந்த நிலத்தில் 400 ஏக்கர் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அந்த விவசாயிகளுக்கே திருப்பித் தரவேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் [^] தலைவர் [^] மம்தா பானர்ஜி [^] தொடர் போராட்டம் [^] நடத்தினார்.
பெரும் கலவரம் ஏற்பட்டு, தொழிற்சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது டாடா நிறுவனம்.
இப்போது நானோ கார்களை குஜராத்தில் உள்ள தங்கள் வேறு தொழிற்சாலைகளில் வைத்து தயாரித்து அனுப்புகிறது டாடா. மேலும் அங்கேயே நானோ தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டாடா டீ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தா வந்த ரத்தன் டாடா, மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் [^] நிருபம் சென்னைச் சந்தித்து சிங்கூர் விவகாரம் குறித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், சிங்கூரில் தங்களிடம் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை திருப்பித் தரத் தயார் என்றும், ஆனால் அதற்குரிய நஷ்ட ஈட்டை டாடா நிறுவனத்துக்கு மாநில அரசு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாநில நலனுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வேன் என்று கூறிய டாடா, இப்போதைக்கு புதிய முதலீடுகள் எதையும் மேற்கு வங்கத்தில் செய்யும் திட்டமில்லை என்றார்.
Leave a Reply