தனியார் மருத்துவர்களைப் போல் அரசு மருத்துவர்களுக்கும் விரைவில் ஊதிய உயர்வு: அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

dmk_mrkpanneerselvamதிருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில், ‘‘மகளிர் சிறப்பு சிறுநீரியல், மகளிர் நோயியல் மற்றும் மகளிர் பிறப்பு பாதை மறுசீரமைப்பு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு’’ திறப்பு விழா நேற்று நடந்தது.

மருத்துவமனை இயக்குனர் எம்.மோகனாம்பாள் வரவேற்றார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மகளிர் சிறப்பு சிறுநீரியல் துறை மூலம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பயிற்சி பெற்று சென்றுள்ளனர். இதனால் 2 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

சிறுநீர் பிரச்னையை கூச்சம் காரணமாக பெண் கள் யாரிடமும் சொல்வதில்லை. சுத்தமாக இருந்தால் பிரச்னைகளை சமாளிக்கலாம். கல்பனா சாவ்லா விருது பெற்ற பேராசிரியர் ராஜமகேஸ்வரி, தனியார் மருத்துவமனையில் அதிக சம்பளத்துக்கு பணியாற்றி இருக்கலாம். ஆனால், அரசு மருத்துவமனையில் சேவை செய்து வருகிறார். விரைவில் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வை முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அரசு செயலர் சுப்புராஜ், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம், சிறுநீரியல் துறை தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.

ரூ.5 லட்சம் நன்கொடை: மகளிர் சிறப்பு சிறுநீரியல் நிபுணர் என்.ராஜமகேஸ்வரி பேசுகையில், “பெண்களின் தேவைகளை உணர்ந்து இந்த துறைக்கு அரசு அதிக உதவிகளை செய்து வருகிறது. எனது மருத்துவ சேவையை பாராட்டி முதல்வர் கருணாநிதி, ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. எனக்கு அளிக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை சிறுநீர் கசிவால் அவதிப்படும் பெண்களுக்கான வார்டுக்கு (பிஸ்டுலா) நன்கொடை அளிக்கிறேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *