பீஜிங்:அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபாய் செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.
2009 ஏப்ரல் வரை கணக்கிட்டதில் எட்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் அங்கு கோடீஸ் வரர்கள்.இப்படி வகை தொகையில்லாமல் சீனாவின் வளர்ச்சி இருப்பதால் அந்நாட்டினர் பணத்தைத் தண்ணீராக செலவழிக்கவும் தயங்குவதில்லை. “வாங்’ என்ற கோடீஸ்வரி பெண்மணி, நாய் வாங்க மூன்று கோடி ரூபாய் செலவழித்துள்ளார்.”வாங்’கும் அவர் நண்பரும் ஒரிஜினல் திபெத்திய வேட்டை நாய்க்காக அலையோ அலை என்று அலைந்து திரிந்தார்களாம்.
கடைசியில் ஒருவழியாக திபெத்தின் “குயிங்காய்’ மாவட்டத்தில் ஒரு பெண்மணியிடம் அந்த நாய் இருப்பது அவருக்குத் தெரிந்தது. விடுவாரா “வாங்’? “வாங்’ இருப்பது வடமத்திய சீனாவின் “ஷான்க்ஸி’ மாவட்டம். அங்கிருந்து பறந்தார் “குயிங் காய்’க்கு. மூன்று கோடி ரூபாய் கொடுத்து அந்த நாயை வாங்கிவிட்டார்.
18 மாத வயது “யாங்ட்ஸ்’ என்ற அந்த நாயோடு திரும்பினார்.அந்த நாயை வரவேற்க “ஜியான்’ ஏர்போர்ட்டில் 30 கருப்பு நிற மெர்சிடஸ் – பென்ஸ் கார்கள் வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் வாங். விமானத்திலிருந்து கார் வரை “யாங்ட்ஸ்’க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு. “தங்கத்துக்குக் கூட விலை உண்டு. என் செல்லத்துக்கு விலையே கிடையாது’ என்று “யாங்ட்சை’ கொஞ்சி மகிழ்கிறார் “வாங்!’
Leave a Reply