பெங்களூர்: இருக்கிற இடத்தையெல்லாம் வீடுகளாக கட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கேயும் கொஞ்சத்தை வாங்கிப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விட்டது.
நிலவில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில் சந்திரயான் விண்கலத்தின் உதவியுடன் நாசா கண்டுபிடித்தது. இதையடுத்து நிலவில் இடம் வாங்க மக்களிடையே ஆர்வம் பிறந்துள்ளதாம்.
கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா.. ஆனால் இதுகுறித்துத்தான் இப்போது இன்டர்நெட்டில் சூடான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நிலவில் ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 20 டாலருக்கு விலை பேசப்படுகிறதாம். இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை ஆரம்பித்து வைத்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த லூனார் எம்பசி என்ற நிறுவனம்.
இந்த நிறுவனம் இன்று நேற்றல்ல, கடந்த 29 ஆண்டுகளாக இந்த வேலையைத்தான் செய்து வருகிறதாம். நிலவில் இடத்தைப் பதிவு செய்வதும், விற்பதும்தான் இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குப் போனால், நிலவில் இடம் வாங்கிப் போடுவது தொடர்பான அனைத்து விவரங்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இது மோசடி வேலை அல்ல என்றும் ஒரு விளக்கத்தையும் அளித்து வைத்துள்ளனர்.
மேலும், சந்திரன் மற்றும் பிற கிரகங்களில் நிலத்தை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் அங்கீகாரம் பெற்ற ஒரே கம்பெனி எங்களுடையதுதான் என்றும் சட்ட நுணுக்கமாகவும் ஒரு விளக்கம் உள்ளது.
இதுவரை தங்களது நிறுவனத்தில் 34 லட்சத்து 70 ஆயிரத்து 72 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
சரி, எப்படி பிற கிரகங்களில் ரியல் எஸ்டேட் வேலையை இவர்கள் செய்ய உரிமை கிடைத்தது என்று பார்த்தால், அதற்கும் ஒரு விளக்கம் இந்த இணையதளத்தில் உள்ளது. அதாவது ஐ.நா. சபையிலும், அமெரிக்கா மற்றும் ரஷ்ய அரசுகளிடமும் இதுகுறித்து முறையாக பதிவு செய்து உரிமையைப் பெற்றுள்ளனராம்.
லூனார் எம்பசியைச் சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்பவர் இதுதொடர்பான உரிமத்தை 29 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி விட்டாராம். பின்னால் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். தங்களது உரிமையை இதுவரை எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை என்றும் வாதிடுகிறார்கள்.
கடந்த 1979ம் ஆண்டு சர்வதேச நிலவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1984ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தப்படி எந்த ஒரு தனி நபரும் நிலவில் உரிமை கோர முடியாது. 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை இதுவரை 13 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால், எந்த ஒரு நாடும், சட்டரீதியாக லூனார் எம்பசியின் உரிமையை கேள்வி கேட்கவில்லை என்பதே.
எனவே ஐ.நா. சபையை அணுகி யார் முதலில் உரிமை கோருகிறார்களோ அவர்களுக்கே அது சொந்தம் என்ற அடிப்படை நியதிப்படி, தாங்கள் ஐ.நா.விடம் முறைப்படி அணுகி உரிமையைப் பெற்றுள்ளதாக கூறுகிறது லூனார் எம்பசி.
சரி இதை விடுவோம். லூனார் எம்பசியின் கணக்குப்படி நிலவின் விலை நிலவரத்தைப் பார்ப்போம். எல்லாம் டாலர் கணக்குதான்.
நிலவின் முக்கிய பகுதிகளில் உள்ள நிலங்கள் – ஒரு ஏக்கர் 22.49 டாலர்கள். பத்திரப் பதிவில் நமது பெயரையும் சேர்த்துக் கொடுத்து விடுவார்களாம்.
பெயர் குறிப்பிடப்படாமல் பத்திரப் பதிவு வேண்டும் என்றால் 19.99 டாலர் கொடுத்தால் போதுமாம்.
லூனார் எம்பசியில் உங்களது பெயரை பதிவு செய்து சொத்தை பதிவு செய்து கொள்ள விரும்பினால் 15 டாலர் கட்ட வேண்டும்.
பிற கிரகங்களுக்கான பெயர்ப் பதிவுக்கு 22 டாலர்.
அப்புறம் என்ன, பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்த்து, பக்கத்தில் ஒரு ஏக்கரை வளைத்துப் போட்டு வைத்தால் நமது பேரப் பிள்ளைகள் அங்கு போய் பிழைத்துக் கொள்வார்கள், ஜல்தியா கிளம்புங்க லூனார் எம்பசிக்கு.
Leave a Reply