லக்னோ:பெண்களுக்காக பெண்களே ஆரம்பித்து நடத்தும், “கோர்ட்’ உ.பி.,யில் செயல்படுகிறது. பெண்களின் பிரச்னைகள் குறித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.உ.பி., மாநிலத்தில் சித்தாபூர் மாவட்டத்தில் இந்த பெண்கள் “கோர்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப் பெண்களுக்கு உள்ள சிறிய பிரச்னைகள் குறித்து தான் இந்த கோர்ட்டில் வாதிடப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தப் பெண்கள் அளிக்கும் தீர்ப்பும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
“மகிளா சமாக்ய’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, இந்த பெண்கள் “கோர்ட்’ அமைய உதவி செய்துள்ளது. பெயரளவில் “கோர்ட்’ என்று கூறினாலும், குறை தீர்க்கும் மையமாகவே செயல்படுகிறது.தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவர் சபியா ஜமீர் கூறுகையில்,””இந்த கோர்ட், சித்தாபூர் மாவட்டத்தில் இரு இடங்களில் மாதத்தில் நான்கு முறை கூடும்; அப்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும். சட்டப்படியான விஷயங்களை எல்லாம் தொடுவதில்லை. கிராம மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும். அதே சமயம், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தான் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது,” என்றார்.
குடும்ப வன்முறை, கொடுமைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தப் பெண்கள் மையம், சில விஷயங்களுக்காக அரசுக்கும் மனு செய்து, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறது.பெண்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது மட்டுமில்லாமல், தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் அரசிடம் கோரிக்கைகளையும் வைத்து முயற்சி செய்வதால், இந்த பெண்கள் “கோர்ட்’டுக்கு மவுசு ஏற்பட்டு வருகிறது. சிறிய பிரச்னைகள் என்றால், யாரும் போலீசுக்குப் போவதில்லை; இங்கு மனு செய்கின்றனர்.
Leave a Reply