பெரம்பலூர் : “பெரம்பலூரில் 300 ஏக்கரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் சேட்டிலைட் நகரம் அமைகிறது’ என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறினார்.
இது குறித்து பெரம்பலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில், 300 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டார் ஓட்டல், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் என அனைத்துவித வசதிகளுடன் துணை நகரம் அமையவுள்ளது.
பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி, அரியலூர் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய திட்டங்களுக்கு அக்டோபர் மாதத்தில், தமிழக முதல்வரால், சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கும். பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று, ஏற்கனவே 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின் ஒருங்கிணைந்த திட்ட வரைவு, டெண்டர் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி, பணிகள் துவங்கப்படும். விரைவில் பெரம்பலூரில் கேந்திரீய வித்யாலயா பள்ளி துவக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Leave a Reply