ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்கள் முதலிடம்

5866162குன்னூர்: ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது; மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு மட்டும் 91.5 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2008-09ம் ஆண்டு அகில இந்திய அளவில் ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 200 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து எட்டு ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி செய்யப்பட்டது; மொத்த பரப்பளவில் இது 89.1 சதவீதம். கேரளாவில் மட்டும் ஐந்து லட்சத்து 2 ஆயிரத்து 740 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி செய்யப்பட்டது; மொத்த பரப்பளவில் இது 81.7 சதவீதம். கடந்த 2008-09ல் இந்தியாவின் மொத்த ரப்பர் <உற்பத்தி எட்டு லட்சத்து 64 ஆயிரத்து 500 டன். தென் மாநிலங்களின் பங்களிப்பு எட்டு லட்சத்து 32 ஆயிரத்து 500 டன்; கேரளாவின் பங்களிப்பு மட்டும் ஏழு லட்சத்து 91 ஆயிரம் டன்; மொத்த உற்பத்தியில் இது 91.5 சதவீதமாகும். கடந்த 2008-09ல் இந்திய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட ரப்பர் மொத்த மதிப்பு 9,251 கோடி ரூபாய்; தென் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரப்பர் மதிப்பு 8,910 கோடி ரூபாயாக இருந்தது; கேரளாவில் உற்பத்தி செய்யப்பட்ட ரப்பரின் மதிப்பு மட்டும் 8,465 கோடி ரூபாய்; மொத்த வருமானத்தில் இது 91.5 சதவீதம். தேயிலைத் தொழில் கொடி கட்டி பறக்கும் தமிழகத்தில், 25 ஆயிரம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது; மொத்த உற்பத்தியில் இது 2.9 சதவீதம். உற்பத்தி செய்யப்பட்ட ரப்பர் விற்பனை மதிப்பு 268 கோடி ரூபாய்; இந்தியாவின் மொத்த ரப்பர் வருமானத்தில் இது 2.9 சதவீதம் மட்டுமே.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *