மதுரை: “குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர்கள் என்பதால் அவர்கள் தனித்தனி காஸ் இணைப்பு பெற தகுதியானவர்கள்’ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு:
நான் 1976ல் இன்டேனிலிருந்து காஸ் இணைப்பு பெற்றேன். என் மனைவி பெயரிலும் காஸ் இணைப்பு உள்ளது. இணைப்பை திடீரென நிறுத்தி வைத்து, இன்டேன் உத்தரவிட்டது. அதை ரத்து செய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன். விசாரித்த தனி நீதிபதி, “ஒரு குடும்பத்திற்கு ஒரு இணைப்பு தான் இருக்க வேண்டும். மனைவி பெயரில் காஸ் இணைப்பு இருப்பதால் அந்த இணைப்பை சரண்டர் செய்யுங்கள்’ என, உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து, காஸ் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் சோமசுந்தரம் ஆஜரானார். இன்டேன் ஏரியா மேலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், “ஒரு வீட்டில் வசிக்கும் கணவன், மனைவிக்கு தனித்தனி காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. எல்.பி.ஜி., சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. காஸ் அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் வருகிறது. கணவன், மனைவி ஒரு வீட்டில் வசிப்பதால் ஒரு இணைப்பு தான் வழங்க முடியும்’ என குறிப்பிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ராவெங்கட்ராமன், துரைச்சாமி கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: காஸ் இணைப்பு குறித்த அரசு அறிவிப்பில் “நபர்’ என்றால் தனிநபர், நிறுவனம் என, கூறப்பட்டுள்ளது. அதில் “குடும்பம்’ என, குறிப்பிடவில்லை. அந்த வகையில் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர்கள் தான். அவர்கள் தனித்தனி இணைப்புகள் பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு தனித்தனி இணைப்பு வழங்க வேண்டும்.
இணைப்பு பெற தகுதியானவர்கள். சட்டத்தில் “நபர்’ என்றால் குடும்பம் என, சொல்லப்படாத பட்சத்தில் மனுதாரர் அவரது பெயரில் காஸ் இணைப்பு வைத்து கொள்வதில் தவறில்லை. அதிகாரிகள் கூறுவது போல சிலிண்டர்களை தவறாக பயன்படுத்தினால், அந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். காஸ் இணைப்பு கொடுக்க முடியாது என கூற முடியாது. தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply