தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி கப்பல் மாலுமியை மீட்டுத்தரும்படி, அவரது பெற்றோர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மும்பையைச் சேர்ந்த “எஸ்.என்.பி.,’ என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் “எம்.வி., அல்கலிக்’, அக்., 22ம் தேதி ரஷ்யாவிலிருந்து கோதுமை ஏற்றிக்கொண்டு தென்னாப்ரிக்கா சென்றுகொண்டிருந்தது. சோமாலியா கடல்பகுதியிலிருந்து 400 கி.மீ., தொலைவில் “சைலஷ்தீவு’ அருகே அக்கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் மடக்கினர். அதிலிருந்த 24 இந்திய மாலுமிகள் உட்பட 26 மாலுமிகளை கப்பலுடன் கடத்திச்சென்று அங்கு மறைவிடத்தில் சிறை வைத்துள்ளனர்.
அம்மாலுமிகளில் இருவர் தமிழர்கள். ஒருவர் தூத்துக்குடி மட்டக்கடை விஜயகணேஷ்(23), கேட்டரிங் முடித்து அக்கப்பலில் பணிபுரிகிறார். மற்றொருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஜயகணேஷ் கடத்தப்பட்ட தகவல் மும்பை கப்பல் நிறுவனம் மூலமாக அவரது வீட்டிற்கு போனில் அக்., 22ம் தேதி மாலை தெரிவிக்கப்பட்டது. மீட்டுத்தரக்கோரி மனு: விஜயகணேஷ் தந்தை வீரமோகன், தாய் சாந்தி மஸ்கரனாஸ் மற்றும் குடும்பத்தினர் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
விஜயகணேஷை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் கோ.பிரகாஷிடம் மனு கொடுத்தனர். அதுபோல மத்திய, தமிழக அரசுகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர். முன்னதாக தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மனு கொடுத்தனர். கடத்தப்பட்ட பின் விஜயகணேஷை போனில் தொடர்பு கொள்ளமுடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அடிக்கடி நடக்கும் கடத்தல்: இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் கடற்படைகள், சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்துவந்தாலும், பெரும் தொகைக்காக அக்கொள்ளையர்கள் மாலுமிகளை கப்பலுடன் கடத்திச் செல்வதும், பேரம் பேசிய தொகை கிடைத்தவுடன் மாலுமிகளை விடுவிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
Leave a Reply