கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பாதையூடாக நேற்றுப் பயணித்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து ஏ9 பாதையூடாக தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த திருமதி பத்மினி சிதம்பரநாதனே, அப்பாதை மக்கள் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்ட பின்னர் தரை வழியாக வந்த தமிழ்க் கூட்டமைப்பின் முதலாவது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்துக்கு ஏ9 ஊடாக முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பயணம் மேற்கொண்டேன். வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் பின்னர் முதல் தடவையாக நேற்று ஏ9 பாதை ஊடாக யாழ்ப்பாணம் வந்தேன்.
கிளிநொச்சி வெறுமையாகக் காட்சியளிக்கிறது. தமிழ் மக்களின் கலாசார அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன்.
எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் பிரசன்னத்தையே காணமுடிகிறது.
மனித நடமாட்டத்தையே காண முடியவில்லை. கால்நடைகளே எங்கும் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் அடையாளங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.
தமிழ் மக்களின் அடுத்த கட்டம் என்ன என்பதை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இன்று உள்ளோம்.
அரசியல் வாதிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் அடுத்த கட்டம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
சர்வதேசத்துக்கும் தெற்கிற்கும் எமது அடுத்த நிலை குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
எமது பலம், பலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் நிறுத்தி எமது அடுத்தகட்ட நகர்வை நாம் நகர்த்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊகங்கள் வெளியாகியுள்ளன. அச்சமான சூழலில் இந்தத் தேர்தல் வருகிறது.
தமிழ் மக்கள் அவதானத்துடன் ஆழமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
Leave a Reply