லக்னோ: சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பத்தான் லஞ்சம் தருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யச் சொல்லி, லஞ்சம் தருகின்றனர் தெரியுமா?ஆம், உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக தங்களை “சஸ்பெண்ட்’ செய்ய சொல்லி, மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்.
தவறு செய்யும் ஊழியர்களை தண்டிப்பதற்காக நிர்வாகம் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இறங்கும். இதை தவிர்ப்பதற்காக அரசு ஊழியர்கள் சிலர் மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வழக்கம்.
ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் தங்களை சஸ்பெண்ட் செய்யக் கோரி, ஆசிரியர்கள் பலர், மேலதிகாரிகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கின்றனர். சஸ்பெண்ட் செய்யப்படும் காலங்களில் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வில் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக ஆசிரியர்கள் மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கான உரிய காரணம் கூறப்படாமல் போனால், இவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். முழு சம்பளமும் கிடைத்து விடுகிறது. ஆசிரியர்கள் செய்யும் இந்த தில்லு முல்லு விவகாரம், மாநில கல்வி அமைச்சர் செய்னிக்கு தெரிந்து விட்டது.
சமீபகாலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை ஆராயும் படி அமைச்சர் செய்னி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் 132 ஆசிரியர்கள் சொந்த வேலைக்காக லஞ்சம் கொடுத்து சஸ்பெண்ட் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Leave a Reply