லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டதற்கு, அவரது செயலை ஏற்காதவர்கள் மேற்கொண்ட மறைமுக எதிர்ப்பே காரணம் என, பரபரப்பாக பேசப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராமானுஜம், நேற்று முன் தினம், மாநில குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். ராமானுஜம், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த போது லஞ்ச, ஊழலை ஒழிக்க, தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்டார். சென்னையில், தலைமைச் செயலக சார்பு செயலர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோல, முக்கிய அலுவலகங்களில் முக்கிய பதவிகளில் இருந்த பலர் சிக்கினர். லஞ்ச ஊழலில் ஈடுபட்ட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டன.
அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன அரசியல் முக்கியஸ்தர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும், இவரை லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து மாற்ற வேண்டுமென, அவரவருக்கு தெரிந்த வழிகளில் வலியுறுத்தி வந்தனர்.மதுரையில் ஒரு பெண் எஸ்.பி., பணியாற்றிய துறையில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனை நடத்தினார். இச்சம்பவத்தில் அந்த இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டுமென, மறைமுகமாக அரசியல் நெருக்கடி அளிக்கப்பட்டது.
அந்த இன்ஸ் பெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து வேறு இடத்திற்கு ராமானுஜம் மாற்றவில்லை. இச்சம்பவத்தால் அதிருப்தியடைந்த சிலர், லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து ராமானுஜத்தை மாற்ற வேண்டுமென, வலியுறுத்தி வந்தனர். இத்துறையில் அவர் தன்னிச்சையாக செயல்படாமல் “செக்’ வைக்க, லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக போலோநாத் நியமிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையிலும் ராமானுஜம், சென்னையில் உள்ள புழல் சிறைச்சாலையில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதுவும், அவர் மீதான அதிருப்தியை அதிகரித்தது என்று கூறப்படுகிறது.தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்து வந்த ராமானுஜம் நேற்று முன்தினம் மாநில குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார்.
முதல்வர் பாராட்டிய அதிகாரி : ராமானுஜம் கடந்த ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஆட்சி மாறியதும் முக்கியமில்லாத பொறுப்புக்கு மாற்றப் பட்டார். இவரின் நேர்மையான செயல்பாடு தெரியவந்ததும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் இவரின் அதிரடி நடவடிக்கையால், லஞ்ச ஊழல் அதிகாரிகள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்ததால், அரசின் மீது மக்களுக்கு மரியாதை அதிகரித்தது.இவரின் அதிரடி நடவடிக்கையை அறிந்த முதல்வர் கருணாநிதி, லோக்சபா தேர்தலின் போது, லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாட்டை பாராட்டினார். இப்படி பாராட்டப்பட்ட அதிகாரி திடீரென, முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதால், இத்துறையில் நேர்மையாகவும், துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு வந்த அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளதாக, பரபரப்பாக பேசப்படுகிறது.
M.Mani
How do our people expect corrupt free Officers, when the CM and the Ministers and MLAs are surfing in corruption.