ஆந்திர குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறல் : பந்த், வன்முறையால் மாநிலம் முழுவதும் ஸ்தம்பிப்பு

posted in: அரசியல் | 0

tblfpnnews_24967157841ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நேற்று நடந்த, “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.

தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு, ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கடலோர மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம், கர்னூல், அனந்தபூர், கடப்பா, சித்தூர், குண்டூர், விஜயவாடா, மசூலிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. திருப்பதி வெங்கடேஸ்வரா, குண்டூர் என்.ஜி.ரெங்கா ஆகிய பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் நேற்று இந்த பகுதியில், “பந்த்’க்கு அழைப்பு விடுத்திருந்தனர். கல்வி நிலையங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந் தன; அரசு பஸ்கள் இயங்கவில்லை; தனியார் வாகனங்களும் இயங்கவில்லை; இயங்கிய ஒரு சில வாகனங்களும் அடித்து சேதப் படுத்தப்பட்டன. சில இடங்களில் பஸ்களுக்கு தீ வைப்பு சம்பவமும் நடந்தது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. வேலூரில் இருந்து சித்தூருக்கு வரும் வாகனங்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. திருவனந்தபுரம் செல்லும் கேரள எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை தடுத்து நிறுத்தப்பட்டன.

திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில், போராட்டம் காரணமாக திருப்பதி ரயில் நிலையத்தில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பதி, அனந்தபூர் பகுதிகளில் தீக்குளிப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்கள், “ஜெய் ஆந்திரா, ஐதராபாத் எங்களுக்கு தான்’ என, கோஷங்களை எழுப்பினர். சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக ஆந்திரா முழுவதும் நேற்று ஸ்தம்பித்தது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா எண்ணிக்கை உயர்வு: இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை நேற்று 128 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 23 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் கிரண்குமார் ரெட்டியிடம் அளித்தனர். காங்கிரசைச் சேர்ந்த 76 பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 38 பேர் உட்பட 128 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த பிரச்னை நேற்று ஆந்திர சட்டசபையில் எதிரொலித்தது. தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பாக பிரிந்து, கட்சி வேறுபாடுகளின்றி எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டனர். இதனால், சபை வரும் திங்கள் வரை ஒத்தி வைக்கப் பட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் கூறுகையில், “இந்த ராஜினாமாக்கள் தானாக செய்யப்பட்டதா அல்லது தூண்டுதலின் பேரில் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு பின், அதை ஏற்பது குறித்து முடிவு எடுப்பேன்’ என்றார். ஆந்திர சட்டசபையில் மொத்தம் உள்ள 294 எம்.எல்.ஏ.,க் களில் 128 பேர் ராஜினாமா செய்துள்ளதால், சபையை தொடர்ந்து நடத்த முடியுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இது குறித்து மாநில அரசு அதிகாரிகள், அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு திணறல்: தெலுங்கானா விவகாரம் சுமுகமாக முடிந்து விடுமென கருதிய மத்திய அரசு, தற்போது அந்த பிரச்னை தீவிரமடைந்து உள்ளதால், கடும் கவலை அடைந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே உறுதியளித்து விட்ட நிலையில், தற்போது அதை வாபஸ் பெறுவதா அல்லது அப்படியே விட்டு விடுவதா என, கடும் குழப்பத்தில் உள்ளது. ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *