மதுரை:மதுரை பேரையூர் அருகே காதல் திருமணம் செய்தவர்கள் மீது தேவையின்றி புகார் கொடுக்கக்கூடாது என, பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார்(23). இவரும், அதே ஊரைச் சேர்ந்த உமா மகேஸ்வரியும் காதலித்தனர். உமா மகேஸ்வரியின் பெற்றோர் இதை எதிர்த்தனர். உமா மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.
உமா மகேஸ்வரி வீட்டில் இருந்து வெளியேறி, கார்த்திக் குமாரை திருமணம் செய்தார். இருவரும் முள்ளிப்பட்டியில் தங்கினர்.இந்நிலையில், உமா மகேஸ்வரியின் தந்தை போலீஸ் துணையுடன் மிரட்டுவதாகவும், பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும், ஐகோர்ட் கிளையில் கார்த்திக் குமார் வக்கீல் முத்தல்ராஜ், பழனியாண்டி மூலம் மனு செய்தார். இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது காதல் தம்பதிகளையும், அவர்களது பெற்றோரையும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அனைவரும் ஆஜராயினர். விசாரணையின் போது உமா மகேஸ்வரி, பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். பெற்றோர் அணிவித்த நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். பிறகு, உமா மகேஸ்வரியை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாக கார்த்திக் குமாரின் பெற்றோர் தெரிவித்தனர். இவற்றை பதிவு செய்த ஐகோர்ட் கிளை, இனி காதல் திருமணம் செய்தவர்கள் மீது அடிக்கடி புகார் கொடுக்கக்கூடாது,” என அவர்களது பெற்றோருக்கு உத்தரவிட்டு, மனுவை பைசல் செய்தது.
Leave a Reply