“நான் டில்லியில் இருக்கிறேனா… கோல்கட்டாவில் இருக்கிறேனா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; ஆனால், நள்ளிரவு 2 மணி வரை என் அமைச்சக வேலைகளை பார்க்கிறேன்,” என்று காட்டமாக லோக்சபாவில் பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
லோக்சபாக் கூட்டத் தொடரில் ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாராசிங் சவுகான்,”மேற்கு வங்கத்தில் ரயில்வே பணிகளுக்காக ரயில்வே அமைச்சர் போதிய நேரம் ஒதுக்குவதில்லை’ என்று குற்றம்சாட்டினார்.இதற்கு, பதிலளித்த மம்தா பானர்ஜி கோபத்துடன்,” நான் எங்கிருந்து என்ன வேலை செய்கிறேன் என்பதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.
தினந்தோறும் இரவு 2 மணி வரை எனது அமைச்சகப் பணிகளை பார்த்து விட்டுத்தான் நான் தூங்கச் செல்வது வழக்கம்’ என்று பதிலளித்தார்.கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி உறுப்பினர் பிரபோத் பண்டா,”ரயில்வே நிலைக் கமிட்டியின் நடவடிக்கைகள் என்னவென்றே வெளியில் தெரிவதில்லை’ என்று குற்றம்சாட்டினார்.திரிணமுல் உறுப்பினர்கள் சிலர் கோபாவேசத்துடன் எழுந்து பண்டாவைப் பார்த்துக் கூச்சல் போட்டனர்; அவர்களை அமைதியுடன் இருக்கும்படி மம்தா சைகை காட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், “அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என்ற பெயரில் ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். இனி அவ்வாறு செய்வதில்லை என்று அவர்கள் உறுதி கூற வேண்டும். “என் மீது அரசியல் ரீதியில் காழ்ப் புணர்ச்சி கொண்ட மார்க்சிஸ்ட்கள், கடந்த சில மாதங்களாக நடத்திய “பந்த்’தால் ரயில்வேக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறை மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால், ஆயிரத்து 500 கோடி ரூபாய் லாபம் சேமிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
Leave a Reply