போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை தனியார் செக்யூரிட்டிக்கு பயன்படுத்தலாம் : போலீஸ் டி.ஜி.பி., யோசனை

posted in: மற்றவை | 0

tblgeneralnews_29759943486சென்னை : “”போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை, தனியார் செக்யூரிட்டுக்கு பயன்படுத்தலாம்,” என டி.ஜி.பி., பேசினார்.


இந்திய பாதுகாப்பு மேலாண்மை கல்வி மையம் சார்பில், பாதுகாப்பு மேலாண்மை குறித்த கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, டி.ஜி.பி., ஜெயின் பேசியதாவது:அச்சுறுத்தல் என்பது இல்லாவிட்டால், பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை. சொத்து, மனித உயிர் ஆகியவை தொடர்பாக அச்சுறுத்தல்கள் எழுகின்றன. சமீபகாலமாக, சைபர் குற்றங்கள், தீவிரவாத தாக்குதல் ஆகிய அச்சுறுத்தல்களும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளன.நம்நாட்டு எல்லைக்கு வெளியே இருந்தும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. உள்நாட்டு பாதுகாப்பில், மாநில போலீசாரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க, சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து போலீசாருக்கு பயிற்சி அளிப்பது மற்றும் தேவையான ஆயுதங்களை வழங்குவது ஆகியவை அவசியம்.

ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில், பாதுகாப்பிற்கான செலவு 50 சதவீத அளவிற்கு இருக்கக் கூடாது; நியாயமானதாக இருக்க வேண்டும். அச்சுறுத்தல் என்பது வேகமாக நகரக் கூடியது. தற்போது மும்பையின் அச்சுறுத்தல் இரண்டு மணி நேரத்தில் சென்னைக்கு வரக் கூடும்.மதவாதிகள், பயங்கரவாதிகள் என, பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். எல்லா அச்சுறுத்தல்களையும் முழுமையாக கண்காணிக்க முடியும் என கூற முடியாது. சி.ஐ.ஏ., எஸ்.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகள் உள்ள அமெரிக்காவில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடி, “ஒருவன் என்னை கொலை செய்வதற்காக தனது உயிரையும் பணயம் வைக்க தயாரானால், அவனை தடுக்க முடியாது’ என்றார்.

தனியார் செக்யூரிட்டி ஏஜன்சிகளில் ஓய்வு பெற்ற போலீசாரையே பயன்படுத்தலாம். ஒரு லட்சம் போலீசார் உள்ள தமிழகத்தில், மூன்று லட்சம் தனியார் செக்யூரிட்டிகள் உள்ளனர். தற்போது எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு நடத்தி, நான்காயிரம் கான்ஸ்டபிள்களை பணிக்கு தேர்ந்தெடுக்கிறோம். தேர்வு பட்டியலில் 4,000க்கு பிறகு வருபவர்களை, தனியார் செக்யூரிட்டிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் எழுந்து விடுவர். ஆனால் தீ ஆரம்பிப்பதற்கு முன்பாக, அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் வசதி தான் நமக்கு தேவை. அதேபோல பாதுகாப்பு விஷயத்திலும் இது பொருந்தும்.இவ்வாறு ஜெயின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *