திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் நடந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது, ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் பணிகளை ஆய்வு செய்தார்.
கேரளா மலப்புறம் எம்.பி.,யும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவருமான இ.அகமது, மத்திய ரயில்வே இணை அமைச்சராக உள்ளார். இவர் நேற்று காலை 7.30 மணிக்கு ரயிலில் நெல்லை வந்தார். ரயில்வே ஸ்டேஷனில் புதிய கட்டட பணிகளை, அவர் ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், கட்சியினரின் நெரிசலால் அவரால் எங்கும் செல்லமுடியவில்லை. இரண்டு கட்டடங்களை ஒன்றரை நிமிடத்தில் வாசலில் நின்றவாறே எட்டிப்பார்த்து ஆய்வு செய்தார்.உடனடியாக காயல்பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க காரில் கிளம்பினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஏற்கனவே 3, 4 பிளாட்பார விரிவாக்கம் உட்பட, ரூ.35 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. தற்போது பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட அறை உட்பட ரூ.4.5 கோடியில் புதிய பணிகள் நடக்கின்றன. மேலும், ரூ. 4.5 கோடி செலவில் லிப்ட்டுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வந்துசெல்லும் ரயில், இனி நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்படும். நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் கபாவிற்கு அறிவிக்கப்பட்ட ரயில் விரைவில் இயக்கப்படும், என்றார்.
மத்திய அமைச்சரின் ஒன்றரை நிமிட ஆய்வுக்காக, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனில் சிங்கால் மற்றும் ஏராளமான ரயில்வே அதிகாரிகள், போலீசார் மதுரையில் இருந்து வந்திருந்தனர். ஆனால், அமைச்சரோ பணிகளை பெயரளவுக்கு கூட ஆய்வு செய்யவில்லை. “கட்சி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு ரயில்வே நிகழ்ச்சி என கூறிக்கொள்கிறீர்களே,’ என நிருபர்கள் அமைச்சரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அகமது, “”எல்லாரும் அப்படித்தான் செய்கிறார்கள். என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்,” என்றார்.
ஆந்திராவில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களை இயக்க நடவடிக்கை : தூத்துக்குடி: திருச்செந்தூர், காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:”” கடந்த மத்திய பட்ஜெட்டில் 71 புதிய ரயில்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, அதன்படி தற்போது 55க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள ரயில்கள் வரும் பட்ஜெட்டிற்குள்ளாக இயக்கப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றவேண்டும், என்ற நோக்கோடு ரயில்வேதுறை செயல்படுகிறது.
ஆந்திராவில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக அங்கு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில்வே ஸ்டேஷன்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதுகுறித்து விரைவில், நான் அங்கு சென்று ஆய்வு செய்யவுள்ளேன். அதன்பிறகு, அங்கு ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரசை தினமும் இயக்கவேண்டு மென்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வந்துள்ளன. அவை குறித்து பரிசீலிக்கப்படும். சென்னையில் நான்கு புதிய ரயில்களை முதல்வர் கருணாநிதி சில நாட்களுக்கு முன் துவக்கி வைத்தார். ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், புதிய ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தற்போது என்னால் எதுவும் கூறமுடியாது,” என்றார்.
Leave a Reply