சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை கன்டோன்மென்ட் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதுதொடர்பாக நிர்வாகத்தில் புகார் செய்தும் பலனில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், கன்டோன்மென்ட் போர்டில் இடம்பெற்றிருந்தும் அதிகாரம் இல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் சரிவர செயல்படாவிட்டால் தேர்தல்களில் அவர்களை மக்கள் தோற்கடித்து போர்டில் இருந்து நீக்க முடியும்.
கன்டோன்மென்ட் பகுதியில் மட்டும் தேர்தல்கள் சடங்காக நடத்தப்படுகிறது. மேலும், முனிசிபாலிட்டியில் உள்ள அதிகாரங்கள் கூட அவர்களுக்கு இல்லை. அதிகாரமில்லாத பிரதிநிதிகளை தேர்வு செய்துவிட்டு, அதிகாரிகளையும் கேட்டு தங்கள் குறைகளை தீர்க்க முடியாத நிலையில் கன்டோன்மென்ட் மக்கள் உள்ளனர். இந்த பகுதியில் உடனடியாக குடிநீர் இணைப்பு, சாலைகள் அமைத்தல், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் 27ம் தேதி கன்டோன்மென்ட் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Leave a Reply