150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்

posted in: மற்றவை | 0

tblhumantrust_66545832158அழகர்கோவில் : தனிக்குடித்தன மோகம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், 150 ஆண்டுகளாக ஏழு தலைமுறைகளாய், ஒன்றாக சேர்ந்து பிரார்த்தித்து கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்துகின்றனர், திருநெல்வேலியைச் சேர்ந்த விசுவாசம் குடும்பத்தினர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பகுதிக்கு, 1860ம் ஆண்டு, வனத் துறை அதிகாரியாக, விசுவாசம் என்பவர், குடும்பத்துடன் வந்தார். இவருக்கு இயேசுதாஸ், துரைராஜ், மேரியம்மாள், செல்லையா, ரெத்தினவதி, தாயம்மாள், பொன்னையா என, ஏழு குழந்தைகள். வெவ்வேறு தொழில்கள் செய்து வந்தாலும், அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர். இவர்கள் குழந்தைகள், தற்போது பல்வேறு நாடுகளில் பணியில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிச., 30ம் தேதி, அனைவரும், அழகர்கோவில், பொய்கைக்கரைப் பட்டியில் உள்ள ஜெபத்தோட்டத்தில் ஒன்று கூடி, அன்று முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இதற்காக, முதல்நாளே, ஒரே வீட்டில் ஐக்கியமாகி விடுகின்றனர். தற்போது, இந்த குடும்பத்தில், 150 பேர் உள்ளனர்.

இதுகுறித்து, மூத்த குடும்பத் தலைவி பத்மாவில்சன் கூறியதாவது: இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் உறவுகள்; அதை நாம் பாதுகாக்க வேண்டும். ஏழு தலைமுறையாக, உறவுகளை பாதுகாத்து வருகிறோம். பேரன், பேத்திகள் சிலர், வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அனைவரும் ஒன்று சேரும் இந்த நாளில், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கிறோம்; குடும்பத்தின் சுக, துக்கங்களில் பங்கேற்கிறோம். இதனால், உறவுகளில் விரிசல் ஏற்படாமல், ஆலமரத்தின் விழுதுகள் போல் உள்ளோம். இவ்வாறு பத்மா வில்சன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *