புது தில்லி, பிப். 11: அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் இந்தியாவும் பிரிட்டனும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டேக் இருவரும் தில்லியில் அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் அணுசக்தி வர்த்தகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிலையங்கள் ஆகியவற்றில் பிரிட்டன் காலூன்ற இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அணு உலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக இரு நாடுகளிடையிலான கூட்டு பொருளாதார வர்த்தக கமிட்டி கூட்டம் லண்டனில் இந்த மாத துவக்கத்தில் நடைபெற்றது. அதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பங்கேற்றார். அப்போது இரு நாடுகளிடையே அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான கூட்டு பிரகடனம் குறித்து இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரிட்டன் அமைச்சர் பாட் மெக்ஃபாடன் இந்த வார இறுதியில் தில்லி வருகிறார். அப்போது அணு உலைகளுக்கு தேவையான எரிபொருள்களை சப்ளை செய்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் புதிய அணு உலைகள் அமைப்பதற்கு தேவையான பாகங்களை வழங்குவது தொடர்பாகவும் அப்போது முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச அணுசக்தி வர்த்தகத் தடை கடந்த 2008-ல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அணுசக்தி ஒத்துழைப்பில் இந்தியாவுடன் கையெழுத்திடும் எட்டாவது நாடாக பிரிட்டன் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா, கஜகஸ்தான், மங்கோலியா, ஆர்ஜெண்டீனா மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் அணுசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளன.
கனடாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இந்தியா நடத்திவரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
Leave a Reply