நேர்காணல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு.
சென்னை, ஜன. 10: அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வகையில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சென்னையில் புதன்கிழமை நேர்காணல் நடைபெற்றது. இதில் பங்கேற்க நூற்றுக் கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால், மறுதேதி அறிவிக்கப்படாமல் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு மற்றும் போலீஸாரின் அனுமதியின்றி இந்த நேர்காணல் நடத்தப்பட்டதாக அறிந்ததால் நேர்காணலை ஒத்திவைக்க போலீஸார் உத்தரவிட்டனர்.
ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல்வேறு இடங்களில் அமெரிக்க ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
தலிபான்கள், அல்}கொய்தா உள்ளிட்ட சர்வதேச தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க கூட்டுப் படையினரின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்காக சரக்கு கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் தாற்காலிக விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஏராளமான இடங்களில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு மிகப் பெரிய முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும், ராணுவத் தளவாடங்களும் பெருமளவு அமெரிக்காவில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்தச் சரக்குகளை கையாளுவதற்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காக இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முகவர்கள் மூலம் ஆள்களைத் தேர்வு செய்யும் பணி இப்போது தீவிரமாக நடைபெறுகிறது.
லட்சக் கணக்கில் ஊதியம்: விமான நிலையங்களில் சரகக்குகளை கையாளுவோர், சரக்கு கிடங்கு மற்றும் எரிபொருள் பராமரிப்பாளர்ஆகிய பணியிடங்களில் சேர உடல் திறன், கணினி அறிவுடன் கூடிய முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1.91 லட்சம் (4,064 டாலர்கள்) வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டயர் பராமரிப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 54 ஆயிரம் வரை
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஸ், லாரி, டிரக் ஓட்டுநர்கள், கிரேன் ஆபரேட்டர்கள்,டெய்லர், சமையல்காரர், பேக்கர்ஸ், சலவைப் பணியாளர்கள், ஐஸ் கிரீம் தயாரிப்போர் உள்ளிட்ட 70 வேலை இடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.
“வளைகுடா நாடுகள்} அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆள்கள் இலவச நியமனம்’ என்ற தலைப்பில் இந்த விளம்பரம் இருந்தது.
சலுகைகள் தாராளம்…குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவத்துடன், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டுதோறும் விடுமுறையில் தங்களது தாயகத்துக்கு சென்று திரும்ப இலவச விமான டிக்கெட் வசதி உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி முதல் கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும்
ஏராளமானோர் நேரிலும், ஆன்லைன் முறையிலும் விண்ணப்பித்தனர்.
இதற்கான நேர் காணல் சென்னை ராயப்பேட்டை தபால் நிலையம் அருகே நல்லண்ண முதலி தெருவில் உள்ள கட்டடத்தில் பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். சிலர் துபை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர்.
போலீஸ் தடியடி: இதனால் நேர்காணல் நடந்த குறுகலான பகுதியில் அதிகாலை 4 மணி முதல் நெரிசல் அதிகரித்தது. ஆனால், நேர்காணல் நடத்திய நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் அலுவலகத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. இதையடுத்து கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே ராயப்பேட்டை போலீஸார் வந்து கும்பலைக் கலைக்க தடியடி நடத்தினர். அனுமதியின்றி நேர்காணல் நடத்தப்பட்டதால் நிர்வாகிகளை போலீஸார் எச்சரித்து நேர்காணலை ஒத்திவைக்க செய்தனர்.
Leave a Reply