இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீருக்குப் போர்?: இண்டஸ் ஆணையர் மறுப்பு

posted in: உலகம் | 0

லாகூர்,​​ பிப்.​ 10:​ இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் போர் இல்லை என்று இண்டஸ் நதி நீர் பகிர்வு ஆணையத்தின் ஆணையர் ஜி.​ ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நதி நீர் பகிர்வு தொடர்பான வழக்கமாக நடைபெறும் ஆய்வுக்காக 5 நாள் பயணமாக ரங்கநாதன்,​​ பாகிஸ்தான் சென்றுள்ளார்.​ லாகூரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் மேலும் கூறியது:

இந்தியா- ​ பாகிஸ்தான் இடையே நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.​ நீர் பங்கீடு சுமுகமாக நடைபெற்று வருகிறது.​ பாகிஸ்தானில் நீரை திருடும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.​ செனாப் நதியில் நீர்வரத்து குறைந்துள்ளதற்கு பருநிலை மாறுபாடு போன்ற பிரச்னைகள்தான் காரணம்.​ இதன் தாக்கம் எல்லை பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது.​ 1960-ல் செய்து கொள்ளப்பட்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார் ஜி.​ ரங்கநாதன்.

பாகிஸ்தான் நதி நீர் ஆணைய தலைவர் ஜமாத் அலி ஷா கூறும் போது,​​ பாகிஸ்தான் அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இந்தியா சென்று நதி நீர் பகிர்வு முறை குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது என்றார்.

​ ஜம்மு-​ காஷ்மீரில் இந்தியா அணைகளைக் கட்டி தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நதி நீரை திசை திருப்பி வருவதாக பாகிஸ்தான் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.​ இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.​ இரு நாடுகளிடையிலான வெளியுறவுத் துறை செயலர்கள் பேச்சின் போது இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *