லாகூர், பிப். 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் போர் இல்லை என்று இண்டஸ் நதி நீர் பகிர்வு ஆணையத்தின் ஆணையர் ஜி. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நதி நீர் பகிர்வு தொடர்பான வழக்கமாக நடைபெறும் ஆய்வுக்காக 5 நாள் பயணமாக ரங்கநாதன், பாகிஸ்தான் சென்றுள்ளார். லாகூரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் மேலும் கூறியது:
இந்தியா- பாகிஸ்தான் இடையே நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. நீர் பங்கீடு சுமுகமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் நீரை திருடும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. செனாப் நதியில் நீர்வரத்து குறைந்துள்ளதற்கு பருநிலை மாறுபாடு போன்ற பிரச்னைகள்தான் காரணம். இதன் தாக்கம் எல்லை பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. 1960-ல் செய்து கொள்ளப்பட்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார் ஜி. ரங்கநாதன்.
பாகிஸ்தான் நதி நீர் ஆணைய தலைவர் ஜமாத் அலி ஷா கூறும் போது, பாகிஸ்தான் அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இந்தியா சென்று நதி நீர் பகிர்வு முறை குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது என்றார்.
ஜம்மு- காஷ்மீரில் இந்தியா அணைகளைக் கட்டி தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நதி நீரை திசை திருப்பி வருவதாக பாகிஸ்தான் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இரு நாடுகளிடையிலான வெளியுறவுத் துறை செயலர்கள் பேச்சின் போது இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.
Leave a Reply